கொரோனா.. தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதி.. ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் கோரிக்கை
சென்னை: ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி பழகும் சூழல் கொண்டோருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள், அவ்வப்போதான சோதனை மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் விரிவான பலன்களை வழங்குமாறு சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது எச்சரிக்கை மணியாகும். ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இயங்கும் மற்றும் கொரோனா வைரஸால் எளிதாக பாதிக்கப்படும் அபாயம் உள்ள பிரிவினருக்கு சரியான சுகாதாரப் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம். துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில ஊடக நிறுவனங்களை தவிர, பல ஊடக நிறுவனங்கள் மருத்துவ காப்பீட்டு வசதி செய்து கொடுக்கவில்லை.
எனவே, அரசு விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.
ஊடகங்களின் அலுவலகங்கள், ஊடக ஊழியர்களின் வீடுகளில் (அரசிடம் ஊடகவியலாளர்களின் பெயர்களும் முகவரிகளும் உள்ளன) பரி சோதனை மேற்கொள்ள புவியியல் ரீதியாக மேப் தயாரிக்கலாம். பத்திரிகையாளர்கள் சமீபத்திய கிளஸ்டராக உருவெடுத்துள்ளனர். அவர்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் செயல்படுவதால், அதாவது, மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பலருடன் ஒவ்வொரு நாளும் சந்திக்கின்றனர். எனவே, அவர்களை எளிதில் தொற்றுநோய் சென்று சேர்ந்துவிடும்.
இது போன்ற ஒரு நேரத்தில், அரசு மற்றும் ஊடக நிறுவனங்கள் இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் - ஆரோக்கியம்தான் செல்வம், மற்றும் குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது.
Recommended Video
தொற்றுநோயால் இறந்தால் ஒரு சில லட்சம் ரூபாயை அரசு அறிவிப்பது எளிதானது, ஆனால் ஊடக ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு வைரஸ் தாக்கம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தேவை. இவ்வாறு ரிப்போர்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது.