கம்யூனிஸ்ட் தாத்தாவின் பேரன் என்பதை நந்தினியின் கரம்பிடித்து நிரூபித்த குணாஜோதிபாசு
சென்னை: தாம் ஒரு கம்யூனிஸ்ட் தாத்தாவின் பேரன் என்பதை மது ஒழிப்புப் போராளி நந்தினியின் கரம்பிடித்து நிரூபித்திருக்கிறார் குணாஜோதிபாசு.
மது ஒழிப்பு போராளியான வழக்கறிஞர் நந்தினி அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். ஒவ்வொருநாளும் போராட்டங்கள்தான்..
நந்தினி, அவரது தந்தை ஆனந்தன், தங்கை நிரஞ்சனா என ஒட்டுமொத்த குடும்பமே போராளிகள்.. நீதிமன்றத்தில் மது உணவுப் பொருளா? போதைப் பொருளா? என கேள்வி எழுப்பி அதிரவைத்தவர் நந்தினி.
நந்தினியின் திருமணம் ஜூலை 5-ந் தேதி நடைபெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தங்கைக்கும் சகோதரிக்கும் நீதி கேட்ட நிரஞ்சனாவும் சிறைக்குள் தள்ளப்பட்டார்.
நந்தினி ஜாமீனில் வெளியே வந்த உடன் மிக எளிமையான குணா ஜோதிபாசு என்ற இளைஞரை கரம்பிடித்திருக்கிறார். கரூரில் வசித்து வரும் சக்திவேல் மகன் குணா.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள எ. பண்ணைப்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட குடும்பம். குணா ஜோதிபாசுவின் தாத்தா கெண்டையசாமி தீவிரமான மார்க்சிஸ்ட் கட்சி தொண்டராக இருந்தவர்.
மிக சிறிய குக்கிரமான பண்ணைப்பட்டியில் திராவிட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். வெளிப்படையாக இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த குடும்பங்கள் இரண்டுதான். அதில் குணா ஜோதிபாசுவின் தாத்தாவும் ஒருவர்.
கெண்டையசாமி தமது மகன்களையும் அரசியல்மயமாக்கினார். இப்போது தாம் கம்யூனிஸ்ட் தாத்தாவின் மகன் என்பதை மது ஒழிப்புப் போராளி நந்தியின் கரம்பிடித்து நிரூபித்திருக்கிறார் குணா ஜோதிபாசு.