வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்
சென்னை: வெங்காயம் விலை நாடு முழுவதும் தாறுமாறாக உயர்ந்துவிட்ட நிலையில் சென்னையில் உள்ள பிரியாணி கடை வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை என்று வித்தியாசமான முறையில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை 100 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்த நிலையில் ரூ.150 ஆக தற்போது உயர்ந்துள்ளது.
வடமாநிலங்களில் வெங்காய குடோன்களில் வெங்காயங்கள் அதிக அளவு திருடப்படுவதாக போலீசில் புகார்களும் வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் கூட பெரம்பலூர் அருகே 300 கிலோ வெங்காயத்தை விவசாயியிடம் இருந்து ஒரு கும்பல் திருடிச்சசென்றுவிட்டது.
தள்ளப்பட்டுள்ளனர்
இப்படிப்பட்ட சூழலில் வெங்காயத்தை பாதுகாக்க பாதுகாவலர்களை நியமிக்கும் நிலைக்கு வெங்காய வியாபாரிகளும் விவசாயிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.
காவலாளி தேவை
இந்நிலையில் சென்னையில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடை வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை என்று வித்தியாசமான முறையில் சமூக வலைதளத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு தெரியும்
அந்த விளம்பரத்தில் "வெங்காயம் சாப்பிடாதவர்களுக்கு அதன் அருமை தெரியாது ஆனால் வெங்காயத்தை வியாபாரத்துக்காக வாங்குபவர்களுக்கும் அதனை அன்றாடம் பயன்படுத்தும் சாமானிய மக்களுக்கும் அதன் அருமை தெரியும்.. வெங்காயம் விலை கிலோ 20 ரூபாய் இருந்தபோது பிரியாணி விலை 150..
கட்டாயம்
இப்போது வெங்காய விலை 150 ரூபாய். எப்போதும் பிரியாணி விலை 150 ரூபாய் மட்டுமே..வெங்காயத்திற்கு பதிலாக வெள்ளரிக்காயை வைத்து பச்சடி(Raitha) செய்து விட்டோம் ஆனால் பிரியாணி செய்வதற்கு வெங்காயம் அத்தியாவசியமான பொருள்.
பாதுகாக்க
ஆங்காங்கே வெங்காய மூட்டைகள் திருடு போவதால் நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்." என கூறியுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.