Guru peyarchi palan 2020/ குரு பெயர்ச்சி 2020- இந்த 4 ராசிக்காரர்களுக்கும் கோடீஸ்வர யோகம் தேடி வரும்
தனுசு ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் நவம்பர் மாதம் மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு திருமண யோகத்தையும், புத்திர பாக்கியத்தையும் தருபவர், செல்வம் செல்வாக்கை அதிகரிப்பவர் குருபகவான். தனுசு ராசியில் உள்ள குரு பகவான் மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த குருவின் சஞ்சாரம், பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு அதீத நன்மைகளை கொடுக்கப் போகிறது. சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் கொடுக்கும். தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மகரம் ராசியில் ஐப்பசி 30ஆம் தேதி அதாவது நவம்பர் மாதம் 15ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி அதாவது நவம்பர் 20ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. மகரம் ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது.
மகரம் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இங்கிருந்து குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது. நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுமே நல்ல பலன்களை அடையப்போகிறார்கள். முதல் ஆறுமாதங்களுக்கு சிலருக்கு பாதகமாக இருந்தாலும் அடுத்த ஆறுமாதங்கள் குரு கும்பம் ராசிக்கு பயணிக்கும்
போது நிறைய நன்மைகளை கொடுப்பார் குருபகவான். இந்த குரு பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குரு இனி மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு இரண்டாம் வீட்டிற்கு போவது சந்தோஷமான விசயம். ஜென்ம ராசியில் இருந்த கேது இப்போ இடப்பெயர்ச்சியாகி 12ஆம் வீட்டிற்கு சென்று விட்டது நிம்மதியான விசயம். குரு இனி நீசமாகி குடும்ப ஸ்தானத்திற்கு போகிறார். உங்களின் சொல்லுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கஷ்டங்கள் தீரும் கடன்கள் நீங்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுகிறது. ஆறாம் வீட்டில் ராகு சஞ்சரிக்க ராகுவின் மீது குருவின் பார்வை விழுகிறது. கடன் பிரச்சினைகள் தீரும் பண வரவு அதிகரிக்கும். நோய்கள் குணமடையும்.
வாக்கு ஸ்தானத்தில் உள்ள குருவினால் நீங்கள் சொல்லும் சொல்லிற்கு மதிப்பு மரியாதை கூடும். வியாபாரம் தொழிலில் முதலீடுகள் செய்யலாம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அஷ்டம் ஸ்தானத்தில் விழும் குருவின் பார்வையால் கஷ்டங்கள் நீங்கும். குருவின் பார்வை பத்தாம் வீட்டில் விழுவதால் உங்களுடைய வேலை தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். ஏழரை சனியால் நெருக்கடிகள் ஏற்பட்டது. ஜென்ம கேதுவினால் சிக்கல்கள் உருவானது.
இனி இந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். இனி நல்ல காரியங்கள் படிப்படியாக நடைபெறும். ஏப்ரல் மாதத்தில் குரு அதிசாரமாக மூன்றாம் வீட்டிற்கு சென்று மறையப்போகிறார் அந்த கால கட்டத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றாலும் குருவின் பார்வையால் சந்தோஷமும் பணவரவும் அதிகரிக்கும்.
மகரம்
மகரம் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். குரு உங்க ராசிக்கு மூன்று மற்றும் 12ஆம் வீட்டிற்கு அதிபதி. குரு சில மாதங்களில் உங்க ராசிக்கு வந்து சனியோடு இணைந்து சஞ்சரிக்கப்போகிறார். ஏற்கனவே ஜென்ம சனி இருக்கும் நிலையில் ஜென்ம குரு வந்து என்ன செய்யப்போகிறார் என்று சங்கடப்பட வேண்டாம். குரு வீட்டிற்குள் வருவதால் கலக்கம் வேண்டாம் தெளிவு பிறக்கும். உங்க ராசிக்கு ஐந்து, ஏழு,
ஒன்பதாம் வீடுகளின் மீது குரு பார்வை விழுகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் புத்திரபாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். ஏழாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமணம் சுப காரியங்கள் கைகூடும். இழுபறியாக இருந்த காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். வேலையை பொறுத்தவரைக்கும் இப்போது இருக்கும் வேலையில் கவனமாக இருப்பதே நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் இடம் மாறி அதிசாரமாக உங்க ராசியை விட்டு இரண்டாம் வீட்டிற்கு நகரும் போது சிக்கல்கள் சங்கடங்கள் நீங்கும். ஜென்ம குரு வனத்திலே என்று சொல்வார்கள், பயப்பட வேண்டாம் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் நிறைய போராட்டங்களை வெற்றிகரமாக மாற்றி சாதிக்கலாம். சவால்களை சாதனைகளாக மாற்றுங்கள்.
கும்பம்
கும்பம் ராசிக்கு குரு இரண்டு மற்றும் லாப ஸ்தான அதிபதி. பணவரவு கொடுப்பதில் குருவுக்கு நிகர் வேறு இல்லை. மகரம் ராசியில் இருக்கும் குருவினால் உங்களுக்கு விரையம் அதிகரிக்கும் சுப விரையமாக மாற்றுங்கள். விரைய ஸ்தானத்தில் குரு நீசம் பெற்றிருப்பதால் பொருள் விரையம், பண விரையம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். ஏற்கனவே 10ல் கேது மூன்றில் ராகு சஞ்சரிக்கிறார். எனவே தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். குருவின் பார்வை நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. சொத்து சுகம் சேர்க்கை ஏற்படும். வீடு வண்டி வாங்கலாம். இது சுப விரைய செலவு என்பதால் பிரச்சினையில்லை. ஆறாம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம் என்பதால் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம். நோய்கள் தீரும் ஆயுள் அதிகரிக்கும். அவமானங்கள் நீங்கும். பெண்களாக இருந்தால் தோஷங்கள் நீங்கும். தாலி பாக்கியம் அதிகரிக்கும். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கும்பம் ராசியில் ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம். குருவின் பார்வை ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாம் வீடான களத்திர ஸ்தானம், ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் விழுகிறது. அந்த கால கட்டத்தில் திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். புத்திர பாக்கிய யோகம் கை கூடி வரும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு விழிப்புணர்வை தரக்கூடிய மனிதர்களை புரிந்து கொள்ள வைக்கக்கூடியதாக இருக்கும்.
மீனம்
மீனம் ராசிக்கு குரு ராசி அதிபதி. குரு நவம்பர் மாதம் முதல் லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இது சரியான நேரம். தொழில் தொடங்கலாம். அதிர்ஷ்டங்கள் நிறைந்த கால கட்டமாக இருக்கும். பணவரவு அதிகமாக கிடைக்கும். செய்யும் முதலீடுகள் லாபகாரமாக இருக்கும். குருவின் பார்வை மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பார்வையால் சகோதரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். சந்தோஷமான சம்பவங்கள் அதிகம் நடைபெறும்.
திருமணத்திற்கு காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு யோகங்கள் அதிகம் தேடி வரும். ஏழு மாதங்களுக்கு பிறகு குரு ஏப்ரல் 2021ஆம் ஆண்டு விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டிற்கு செல்கிறார் இந்த நேரத்தில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளலாம். உங்களுடைய எதிர்பார்ப்புகள், ஆசைகளை நிறைவேற்றித்தரக்கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.