அதிமுகவுடனான ராஜ்யசபா பேரத்தில் குருமூர்த்தி, வானதி பெயரும் அடிபடுதே!
Recommended Video
சென்னை: அதிமுகவுடனான பாஜகவின் ராஜ்யசபா பேரத்தில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, வானதி சீனிவாசன் ஆகியோரது பெயரும் அடிபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது அமைச்சரவையில் அதிமுக பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவின் அத்தனை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் சீனியர் வைத்திலிங்கத்துக்குத்தான் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமாருக்கு எப்படியும் அமைச்சர் பதவி வாங்குவது என லாபி செய்து வருகிறார்.
அண்ணன், தம்பியால் சந்திரபாபு நாயுடுக்கு படுதோல்வி... மீளுமா தெ.தே?
முதலில் எச். ராஜா பெயர்
இதனிடையே அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்தால் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் பேரம். இந்த பேரம் முதலில் எச். ராஜாவுக்குத்தான் என்றும் அவரை அமைச்சராக்க பாஜக முயற்சிக்கிறது எனவும் கூறப்பட்டது.
வானதி, குருமூர்த்தி பெயர்
இந்நிலையில் பாஜகவின் ராஜ்யசபா சீட் ரேசில் மேலும் சில பெயர்கள் அடிபடுகின்றன. அதிமுகவை பாஜக பக்கம் வளைத்தது, அதிமுக அணிகளை இணைத்தது, அதிமுகவில் இருந்து சசிகலா வகையறாக்களை வெளியேற்றியது என பக்கா பாஜகவுக்கு இணக்கமான கட்சியாக மாற்றி அமைத்தது ஆகியவற்றில் படுதீவிர பங்கு வகித்தவர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. அதிமுக அணிகள் இணைப்பின் போது பகிரங்கமாகவே குருமூர்த்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர் அதிமுகவினர். அதேபோல் அதிமுக அமைச்சர்களை ‘ஆணமையற்றவர்கள்' என குருமூர்த்தி விமர்சித்த போதும் அதிமுக அடக்கியே வாசித்தது.
அதிருப்தியில் வானதி
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த குருமூர்த்திக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரை பாஜக எம்.பி.யாக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் லோக்சபா தேர்தலில் வாய்ப்பு பறிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கும் ஒரு சான்ஸ் இருக்கிறது என கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த பல ஆண்டுகளாக தீவிர களப்பணி செய்து வந்தார் வானதி சீனிவாசன். அவருக்கு தமிழக அமைச்சர்களும் முழு ஆதரவு தந்தனர். இதனால் பெரும் நம்பிக்கையுடன் வானதி சீனிவாசன் காத்திருந்தார். ஆனால் கோவை தொகுதியை சி.பி.ராதாகிருஷ்ணன் போராடி பெற்றுவிட்டார். இதனால் வானதி சீனிவாசன் கடும் அதிருப்தி அடைந்தார். தேர்தல் பிரசாரத்திலும் அவ்வளவாக தம்மை வானதி ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. தமிழக பாஜக தலைவராக முயற்சித்தார். அதுவும் நடக்கவில்லை.
வானதிக்கு கிடைக்குமா?
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக விரும்பினார் அதுவும் நிறைவேறவில்லை. எப்படியும் எம்.பி.யாகிவிடலாம் என கனவு கண்டார். அதுவும் பறிபோனதால் கடும் அதிருப்தியில் வானதி இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை சமாதானப்படுத்தும் வகையில் எம்.பி. பதவியை பெற்றுத் தருவதில் அதிமுக அமைச்சர்களே முயற்சித்து வருகின்றனராம். இதனால் பாஜகவின் ராஜ்யசபா வேட்பாளர் ரேசில் குருமூர்த்தி, வானதியும் இப்போது இணைந்துள்ளனராம். இந்த பட்டியல் நீடிக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்/.