குட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் சிபிஐ.. இன்றும் விசாரணை
சென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ 3 வது நாளாக விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு லஞ்சம் வழங்கியதாக, குட்கா நிறுவன அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை செங்குன்றத்தில் உள்ள மாதவராவுக்கு சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் டன் கணக்கில் கைப்பற்றப்பட்டது.
சோதனையை தீவிரப்படுத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியன. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கு பல தடைகள் வந்தும், நீதிமன்றம் உத்தரவின் படி சிபிஐ விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில், புகாரில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி விசாரணையை தொடங்கினர். 2வது நாளான நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 9 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், 3 நாளாக இன்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் அவரின் உதவியாளர் சரவணன் மற்றும் ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.