குட்கா: உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு
சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்க கோரி சட்டசபை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் ச
சென்னை: குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும்.
கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்ததாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கங்களை பெற்று நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், கடந்த 7ம் தேதி மீண்டும் கூடிய உரிமைக்குழு, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இந்த தடையை நீக்க கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது உரிமை மீறலா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க உயர் நீதிமன்றம், உரிமைக்குழுவுக்கு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், நோட்டீசுக்கு தடை விதித்தது தவறானது. இந்த வழக்கை தனி நீதிபதி விசாரணைக்கு ஏற்றிருக்க கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது அதிரடி அறிவிப்பு
மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிமைக்குழு நோட்டீசில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமைக்குழு சட்டசபையின் ஒரு அங்கம் என்பதால், உரிமைக்குழு நடைமுறைகளுக்கு அரசியல் சாசன பாதுகாப்பு உள்ளது எனவும், சட்டமன்றத்துக்குள் நடைபெறும் உரிமைக்குழு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. நோட்டீஸ் மீது எந்த முடிவும், கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நீதிமன்றம் தலையிட எந்த அவசியமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.