குட்கா ஊழல்.. ரூ.248 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. மாதவராவிற்கு இடி கொடுத்த ஈடி!
குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் மாதவராவ், சீனிவாச ராவிற்கு சொந்தமான ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் மாதவராவ், சீனிவாச ராவிற்கு சொந்தமான ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் தடை விதித்தது. ஆனாலும் தமிழகத்தில் பல இடங்களில் குட்கா பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது.
இந்த விற்பனைக்கு பின்னிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் லஞ்சம் வாங்கி இருப்பதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை நடந்தது.
மோடி, அமித்ஷாவையே பணிய வைத்த 'ராஜ புலி' எடியூரப்பா.. புகழ்ந்து தள்ளும் கன்னட மீடியாக்கள்!
இந்த குட்கா ஊழலில் உண்மைகள் வெளியே வர காரணமாக இருந்தது, மாதவ ராவ்தான். இவர்தான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். இவர் வீட்டிலும் சோதனை நடந்தது.
அப்போது அவர் வீட்டில் இருந்து ஒரு டைரியும், சில ஆவணங்களும் கிடைத்தது. அதை வைத்துதான் தற்போது இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
குட்கா விற்பனை தொடர்பான வழக்கை ஒரு வருடம் முன் விசாரிக்க தொடங்கிய சிபிஐ தற்போது முறையாக வழக்கு பதிவு செய்து பலர் மீது விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் மாதவராவ், சீனிவாச ராவிற்கு சொந்தமான ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் தற்போது இவர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. 174 அசையா சொத்துக்கள், புதுச்சேரி, தமிழகம், ஆந்திராவில் உள்ள நிலங்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதனால் மீண்டும் தற்போது குட்கா ஊழல் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.