குட்கா விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக ரிட் மனு நாளை விசாரணை!!
சென்னை: சட்டசபையில் குட்கா பொருட்களை காண்பித்த விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த ரிட் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்காவை சட்டசபைக்குள் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டு அனுப்பிய நோட்டீஸ் மீது தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வேண்டுமானால் புதிய நோட்டீஸை அனுப்பி விசாரிக்கலாம் என்று தெரிவித்து இருந்தனர். அதன்படி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு கடந்த 7-ஆம் தேதி 21 பேருக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதை தடுக்க இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக திமுக கூறியது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக தரப்பு வழக்கறிஞர் முறையீட்டை ஏற்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஒப்புதல் அளித்துள்ளார்.
நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அட்டவணை
உரிமைக் குழு அனுப்பிய புதிய நோட்டீஸ் தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகினார். இதையடுத்து, திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 2-வது உரிமை மீறல் நோட்டீஸ்க்கு எதிரான திமுக மனுவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் நாளை விசாரிக்க உள்ளார்.