பேரவைக்குள் குட்கா: திமுகவின் இரண்டாவது ரிட் மனு மீது நாளை இடைக்கால தீர்ப்பு
சென்னை: திமுக தலைவர் உள்ளிட்ட பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான வழக்கில் நாளை காலை இடைக்கால தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழக அரசால் 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதாக குற்றம்சாட்டி, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.-க்கள் சட்டசபைக்குள் 2017ஆம் ஆண்டு குட்கா பொட்டலங்களை கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக பேரவை தலைவர் அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், சட்டபேரவை உரிமை குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பபட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்களும் 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி அமர்வு விசாரித்து இந்த ஆகஸ்ட் 25ல் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் 2017ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிமைக் குழு இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று விசாரணைக்கு வந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை இடமாற்றம், பதுக்கல், விற்பனை தொடர்பாகத்தான் தடை இருந்தது. வெளியில் கிடைப்பதை அரசு கவனத்திற்கு கொண்டு வரவே பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்தனர். 2017ல் அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி அதை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
குட்கா வைத்திருந்தால் அது குற்றமா இல்லையா என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
திமுக எம்.எல்.ஏ.-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ''போதைப்பொருள் வணிகத்திற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கவில்லை. அதனடிப்படையில் தான் குட்கா கிடைப்பது குறித்த பிரச்சினையை பேரவையில் எழுப்பப்பட்டது. உள்நோக்குடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.
திமுக எம்.எல்.ஏ.-க்கள் தரப்பில் அமீத் ஆனந்த் திவாரி, ஏற்கனவே ஒரு பக்க சார்புடன் நடவடிக்கை எடுத்த அதே குழுதான் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரவை விதி 228ஐ மீறும் வகையில் மீண்டும் குழு அமைக்கப்பட்டு, குட்கா விவகாரத்தில் அனுப்பப்பட்டுள்ளது. திமுக மீது முழுக்க அதிருப்தியில் உள்ள துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் குழுவில் இருக்கிறார் என்று வாதிட்டனர்.
இதனையடுத்து, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகஸ்ட் 25ல் தீர்ப்பளித்தவுடன், செப்டம்பர் 7ல் உரிமைக்குழு விரைந்து கூடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குட்காவை காண்பிக்க கூடாது என அரசாணையில் இல்லை. மனுதாரர்கள் காண்பிக்கதான் எடுத்து வந்தார்கள் என்பதை தலைமை நீதிபதி உத்தரவிலும் தெளிவுபடுத்தி உள்ளது. உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு ஏன் இடைக்கால தடை விதிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி நாளை 10.30 மணி அளவில் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு!