தமிழகத்தில் ஆக. 10 முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி.. 50 வயதுக்கு குறைவானவர்களுக்கே அனுமதி
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 7ஆம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை 6ஆவது ஊரடங்கு முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அதன் நிர்வாகிகள் அனுமதி கேட்டு வந்தனர்.
ஆனால் ஜூலை இறுதியில் வெளியான வழிகாட்டும் நெறிமுறைகளின் போது அதற்கான உத்தரவு ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் தமிழகத்தில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பின்வருமாறு ஆணையை பிறப்பித்துள்ளார்கள். மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்திலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் இதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த அறிக்கையை செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.