பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான நியமனம்...உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.. என்னனு பாருங்க!
சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளும் போது, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என விதிகள் கொண்டு வரலாம் என பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் எடுத்த நடைமுறைகளை குறை கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் 2ஜி டேட்டா கார்டு இலவசமா? பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்

விண்ணப்பம்
திருவாரூர் மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் வடமட்டம் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு முருகன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட இப்பணியிடத்துக்கான நியமனத்துக்கு அனுமதி கோரி பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பித்தது.

அதிரடி உத்தரவு
பள்ளியின் கோரிக்கையை நிராகரித்து, மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 'அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அனுமதி பெற அவசியமில்லை. அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் பிற பள்ளிகளில் உபரியாக உள்ள பணியாளர்களை நியமிக்க வேண்டிய தேவையில்லை எனக் கூறி, மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

பள்ளிக்கல்வித்துறை தகவல்
இதை எதிர்த்து பள்ளிக்கல்வி துறை இயக்குனர், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2014-ம் ஆண்டு முதல் காலியாக இருந்த பணியிடத்துக்கு, 4 ஆண்டுகள் தாமதமாக 2018-ம் ஆண்டு தான் நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு முடித்து வைப்பு
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனம் மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என எந்த விதிகளும் இல்லை எனச் சுட்டிக்காட்டி, இதுபோன்ற விதிகளை பள்ளிக் கல்வித்துறை வகுக்கலாம் என அறிவுறுத்தினர். அனுமதிக்கப்பட்ட பணியிடத்துக்கு நியமனம் மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் எடுத்த நடைமுறைகளை குறை கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.