ஒரு வார்டு கவுன்சிலராக முடியுமா.. வைகோவை பார்த்து எச்.ராஜா கேட்டாரே ஒரு கேள்வி
பிரதமரை பற்றி பேச வைகோவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
சென்னை: திரும்பவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பாய தொடங்கிவிட்டார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா!!
சமீப காலமாகவே அளவுக்கு அதிகமாக பிரதமர் மோடியை வைகோ விமர்சனம் செய்து வருவதால், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் மீதான பகிரங்க விமர்சனங்களுக்கு, "வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்" என்று எச்.ராஜா பலமுறை எச்சரிக்கை தொனியுடன் கண்டனம் தெரிவித்து வந்தார்.
மோசடியானது
இந்நிலையில், நேற்று பட்ஜெட் அறிவிப்பு வெளியானதை அடுத்து பல தலைவர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள். குறிப்பாக வைகோ, "அறிவித்த பட்ஜெட், விதிமுறைகளை மீறி வீடு வீட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதற்கு நிகரான மோசடியானது என்றும், நாடு முழுவதும் 130 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுவதுடன், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது" என்று கருத்து சொல்லி இருந்தார்.
ப.சிதம்பரம்
அதேபோல, முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம், "ஓட்டுக்கு தான் இந்த இடைக்கால பட்ஜெட்" என்று தெரிவித்திருந்தார். இவர்கள் இருவரின் கருத்து பற்றி இன்று சென்னை விருகம்பாக்கத்தில் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது எச்.ராஜா சொன்னதாவது:
தேசிய தலைவரா?
"முதலில் பிரதமர் மோடியை பற்றி பேச வைகோவுக்கு என்ன தகுதி இருக்கிறது? வைகோவால் கலிங்கப்பட்டியில் அவருடைய வார்டு கவுன்சிலராக ஆக முடியுமா? டெல்லியில் போய் பேசுவதால் வைகோ தேசிய தலைவராக ஆக முடியுமா?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
மன்னித்து விடலாம்
பிறகு பா.சிதம்பரம் குறித்து பேசும்போது, "பாஜக ஆட்சிக்கு வந்தபோது கஜானா காலியாக இருந்தது. தற்போதுள்ள ஆட்சி பல கோடி வாரா கடன்களை வரவைத்துள்ளது. சிதம்பரம் அடிக்கடி சிபிஐ நீதிமன்றத்திற்கு சென்று வருவதால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை மன்னித்துவிடலாம்" என்று பதிலளித்தார்.