வெற்றியில் அடக்கமும்.. தோல்வியில் எழுச்சியும் தேவை.. எச். ராஜா
5 மாநில தேர்தல் முடிவு குறித்து எச்.ராஜா கருத்து பதிவு செய்துள்ளார்.
சென்னை: வெற்றியில் அடக்கமும், தோல்வியில் எழுச்சியும் தேவை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக சொல்லி கொள்ளும் அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இதனால் தமிழக பாஜக தலைவர்கள் வாயே திறக்காமல் இருந்தனர்.
தமிழிசை மட்டும் நேற்று, வெற்றிகரமான தோல்வி என்று மீசையில் மண் ஒட்டாத கதையாக கருத்தை சொல்லி இருந்தார்.
வைரலானது
இதனால் அமைதி காத்த எச்.ராஜாவின் பழைய ட்வீட் ஒன்றினை எடுத்து நேற்று நெட்டிசன்கள் வைரலாக்கி விட்டனர். அதில் '' மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சிதான். 4 நாட்கள் சிலர் கனவு காணட்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
சகஜம்
இந்த ட்வீட்டை பாஜகவுக்கு எதிராகவே திருப்பிவிட்டு இணையத்தை கலங்கடித்தனர் நெட்டிசன்கள். அந்த நிலையில், பாஜக தோல்வி குறித்து ஒரு நாள் கழித்து வாய் திறந்துள்ளார் எச்.ராஜா. இது சம்பந்தமாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், "ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம் என்று தெரிவித்துள்ளார்.
வாழ்த்துக்கள்
மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி உள்ள எச்.ராஜா, இந்த தேர்தலில் கட்சிக்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றிய அனைத்து செயல்வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியை கூறியுள்ளார்.
|
வெற்றி தோல்வி
வெற்றியில் அடக்கமும், தோல்வியில் எழுச்சியும் தேவை என்ற முக்கிய வரிகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜா பதிவிட்டுள்ளார்.