இழுத்து மூடுங்கள்.. வெட்கம் கெட்டவர்கள்.. நள்ளிரவில் எச் ராஜா அலப்பறை!
சென்னை: நேசமணி ஹேஷ்டேக் மற்றும் இந்தி எதிர்ப்பு ஆகியவை பிரபல கல்லூரியில் நடைபெறும் தற்கொலைகளை திசை திருப்பத்தான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தி திணிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களுக்கு தாய் மொழி , ஆங்கிலம் மற்றும் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
எக்காலத்திலும் தமிழகத்தில் இந்தியை திணிக்கமாட்டோம்.. தமிழிசை பரபரப்பு பேட்டி
கஸ்தூரி ரங்கன் குழு
மூன்றாவது மொழியாக இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றையும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை 3வது மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு கூறியுள்ளது.
பறிபோகும்
இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்றால் தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் இந்தி திணிக்கப்படும். இதனால் மாநில உரிமைகள் பறிபோகும் என்பது கல்வியாளர்களின் கவலையாகும்.
ஸ்டாலின் பரபரப்பு
இந்த நிலையில் இரு மொழிக் கொள்கை மட்டும் கடைபிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் எச்சரிக்கை
அதில் அவர் கூறுகையில் தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு மீண்டுமொரு மொழிப் போராட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு வழி அமைத்து விடாது. மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் "இந்தி" என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
|
எச் ராஜா
ஸ்டாலினின் இந்த அறிக்கையை சுட்டி காட்டி பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா ஒரு டுவீட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் புதிய கல்விக் கொள்கை பற்றி மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத போது நேசமணி மற்றும் இந்தி எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றி கூக்குரலிடுவது SRM கல்லூரி தற்கொலைகள் விஷயத்தை திசைதிருப்பவே. முதலில் Sunshine பள்ளியை ஸ்டாலின் இழுத்து மூடட்டும். வெட்கம் கெட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.