திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்றாரே கருணாநிதி.. இப்ப உதயநிதி நியமனம் என்னவாம்.. எச் ராஜா சுளீர்
Recommended Video
சென்னை: திமுக ஒன்றும் சங்கரமடமில்லை என கருணாநிதி கூறியிருந்த நிலையில் அவரது பேரன் உதயநிதி திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக ஒரு நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்பதற்கு இதுவே உதாரணம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றியை தேடி கொடுத்தார் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எச் ராஜா கடுமையாக விமர்சனம் செய்து ஒரு வீடியோ பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உதயநிதி
அதில் அவர் கூறுகையில் திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த நம்பகத்தன்மையில்லாத கட்சி என்பதற்கு உதயநிதியின் நியமனம் ஒரு உதாரணமாகும்.
விமர்சனம்
இதை கழக கண்மணிகள் உணர்ந்து அந்த இயக்கத்தை விட்டு வெளியே வாருங்கள். ஒரு முறை மிக மோசமாக சங்கரமடத்தை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு கருணாநிதி ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கரமடம் அல்ல. நீங்கள் நினைத்தவர்களையெல்லாம் நியமிப்பதற்கு என விமர்சனம் செய்திருந்தார்.
அழுத்தம் திருத்தம்
அதாவது வாரிசு அரசியல் திமுகவில் கிடையாது என சொன்னார். எனினும் மகன் ஸ்டாலினை கொண்டு வந்தார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின், என் குடும்பத்திலிருந்து யாரும், அது என் மகனாக இருந்தாலும் சரி, மருமகனாக இருந்தாலும் சரி அரசியலுக்கு வரமாட்டார்கள் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.
நியமனம்
ஆனால் ஏற்கெனவே திமுக மாணவரணி செயலாளராக இருந்த எனது நண்பர் வெள்ளக்கோவில் சாமிநாதனை குப்பையில் போட்டுவிட்டு தனது மகன் உதயநிதியை அப்பதவிக்கு ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இது அவர்களுடைய கட்சி விவகாரம், கட்சி நியமனம் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.
லட்சியம்
ஆனால் அன்று ஒரு ரூபாய்க்கு 1 படி அரிசி நிச்சயம் 3 படி அரிசி லட்சியம் என சொன்னதிலிருந்து இப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை பொய்யை மாத்திரமே மூலதனமாக கொண்டு செயல்படும் கட்சி திராவிட முன்னேற்ற கழகம் என்பதை தெளிவுப்படுத்த மாத்திரமே இதை கூறுகிறேன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.