'அனைத்து சமுதாய' பெண்களை விபச்சாரிகள் என பேசினார் திருமாவளவன்.. கைது செய்ய ஹெச். ராஜா வலியுறுத்தல்
சென்னை: 'அனைத்து சமுதாய' பெண்களை விபச்சாரிகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
மனுதர்மம் இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்கிறது என்பது விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனின் கருத்து. ஆனால் இந்து பெண்களை திருமாவளவன் விபச்சாரிகள் என பேசிவிட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர்.
இதற்கு பதிலடியாக பெண்களை விபச்சாரிகளாக மனுதர்மம் சித்தரிக்கிறது என கூறி அதை தடை செய்ய வேண்டும் என்கிற போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் நாளை நடத்துகிறது. இந்த போராட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
மனுதர்மத்துக்கு எதிரான விசிக போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்- வேல்முருகன், சீமான்
மேலும் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக நடிகை குஷ்பு கூறியிருந்தார். பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும் திருமாவளவனை கைது செய்ய கோரியுள்ளார்.
இது தொடர்பாக ஹெச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், தனது சரக்கு மிடுக்கு பேச்சால் அனைத்து சமுதாய பெண்களை காமத்திற்கு அலைபவர்கள் என்றும் ஆண்கள் ஆண்மை அற்றவர்கள் என்று பேசிய தீயசக்தி திருமாவளவன் இன்று இந்து தர்மத்தில் பெண்களை விபச்சாரிகள் என்று கூறியுள்ளதாக பொய் பரப்பியுள்ளார்.இந்த சமூக விரோதியை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.