பதவி முக்கியம் பிகிலே.. பாஜகவில் மீண்டும் லைம் லைட்டில் எச்.ராஜா.. திமுகவை துரத்த இதுதான் காரணமோ?
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தமிழக அரசியலில் மீண்டும் தீவிரமாக திமுகவை விமர்சிக்க தொடங்கி உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு பின் பெரிய அளவில் வாய்ஸ் கொடுக்காமல் அமைதியாக இருந்தவர், மீண்டும் தீவிரமாக பேச தொடங்கி உள்ளார்.
கன்னித்தீவு கதை போலவே, தமிழக பாஜக தலைவருக்கான தேர்வும் நீண்டு கொண்டே செல்கிறது. 6 மாதங்களுக்கும் மேலாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகி உள்ளது. தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்றார்.
அதன்பின் புதிய தலைவர் தமிழக பாஜகவிற்கு நியமனம் செய்யப்படவில்லை. இந்த தலைவர் பதவிக்காக எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
"குத்தினது திமுகவா இருந்தால்.. இருப்போம்" ஆர்.எஸ்.பாரதியை சுட்டிக்காட்டி.. இடித்து காட்டும் எச்.ராஜா
யார் இருக்கிறார்?
இதில் எச். ராஜா சர்ச்சை அரசியலுக்கு பெயர் போனவர். பாஜகவில் இவர்தான் தற்போது லைம் லைட்டில் இருக்கிறார். பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும், அட்மின் போஸ்ட் செய்துவிட்டார் என்று கூறியது தொடங்கி, சென்னை ஹைகோர்ட்டை தவறான வார்த்தையில் திட்டியது, பின் அதற்காக மன்னிப்பு கேட்டது வரை எச். ராஜா செய்யாத கலகமும், சர்ச்சையும் கிடையவே கிடையாது. தமிழக பாஜக பிரபலம் அடைய எச். ராஜா மிக முக்கிய காரணம் ஆவார்.
திமுக தீவிரம்
தற்போது தமிழகத்தில் எச். ராஜா மிக தீவிரமாக திமுகவை விமர்சிக்க தொடங்கி உள்ளார். அதிலும் கடந்த மூன்று நாட்களாக எச். ராஜா போடும் பேஸ்புக் போஸ்டுகள், டிவிட்டுகள் எல்லாம் மிக கடுமையாக, நேரடியாக திமுகவை விமர்சிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இடையில் சில நாட்கள் அமைதியாக இருந்தவர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார். உதாரணமாக, தமிழகத்தில் தீய சக்திகள் கலவரத்தை தூண்டினால் அதை தேசபக்தர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள். திமுக இஸ்லாமியர்களை வைத்து கலவரம் செய்கிறது.
திமுக
திமுக தூண்டிவிட்டால் எங்களுக்கும் தூண்டிவிட தெரியும். அவர்கள் செய்யும் அரசியல் எங்களுக்கு செய்ய தெரியும். ஆனால் நாங்கள் தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும் என்று பார்க்கிறோம். வண்ணாரப்பேட்டையில் சிஏஏ க்கு எதிரான போராட்டம் என்கிற போர்வையில் இஸ்லாமிய வன்முறையினர் காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதை கண்டிக்காத திக, திமுக காங்கிரஸ் கும்பலின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ் எப்படி
திமுக ஒன்றும் தமிழை வளர்க்கவில்லை. தமிழ் வளர்த்தது யார்? தேவாரம்,திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம் பெரியபுராணம் ஆனால், இம்மாதிரியாக எந்த ஒரு படைப்புமில்லாமல் வேலைகாரி,ஓடிப்போனவள் போலீஸ்காரன் மகள், ஓரிரவு எழுதியவர்களெல்லாம் தமிழ் பக்தர்களா?, என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்.
என்ன காரணம்
எச். ராஜாவின் இந்த அதிரடி திமுக எதிர்ப்பு அரசியலும், திடீரென்று மீண்டும் அவர் கட்சிக்குள் அதிக முக்கியத்துவம் பெறவும் நிறைய காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள். தமிழக பாஜக தலைவராக யாரை நியமிக்க வேண்டும் என்று தேசிய தலைமை பெரிய அளவில் குழம்பி வருகிறது. இதற்காக 4 பேர் கொண்ட இறுதி லிஸ்ட் அனுப்பப்பட்ட பின்பும் கூட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதில் எச். ராஜா பெயரும் இடம்பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன அறிவிப்பு
இந்த பெயர்களை பரிந்துரை செய்தது பாஜகவின் தமிழக மூத்த தலைவர் இல.கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் எச். ராஜா பெயரை பரிந்துரை செய்தார் என்கிறார்கள். எச். ராஜா குறித்து இவர் தேசிய தலைமையிடமும் பேசியதாக கூறப்படுகிறது. இல.கணேசன், எச். ராஜாவிற்கு பெரிய அளவில் டெல்லியில் சிபாரிசு செய்துள்ளார், நல்ல முறையில் எடுத்துக் கூறியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
எத்தனை நாட்கள்
இன்னும் 4 நாட்களில் பாஜக தலைவர் யார் என்று அறிவிப்பு வெளியாகும். இதற்கான அறிவிப்பிற்காக காத்து இருக்கிறோம் என்று இல.கணேசன் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வார இறுதிக்குள் எப்படியும் தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகிவிடும் என்கிறார்கள். பெரும்பாலும் எச். ராஜாவே தமிழக பாஜக தலைவர் ஆவார் என்றும் கூறுகிறார்கள். இதனால் தேசிய தலைமையின் கவனத்தை ஈர்க்கவே எச் . ராஜா தீவிரமாக பேட்டி கொடுத்து வருகிறார். மீண்டும் அதிரடியாக அரசியல் செய்ய தொடங்கி உள்ளார் என்கிறார்கள்.
சரியானவர்
திமுகவை எதிர்த்தால் பாஜக தேசிய தலைமையின் கவனம் நம் பக்கம் திரும்பும் என்று எச். ராஜா நம்புகிறார். சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் லேசான திமுக ஆதரவு நிலைப்பாட்டு கருத்தை பேசி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக திமுக எதிர்ப்பு அரசியல் என்ற நிலைப்பாட்டை தீவிரமாக எடுத்துள்ளது. தமிழிசை போல சாந்தமாக இல்லாமல், அடித்து ஆட கூடிய நபரை பாஜக தேடி வருகிறது. அதற்கு எச். ராஜாதான் சரியாக இருப்பார் என்று பாஜக தேசிய தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.
மாநில தலைவர்!
கேரளாவில் பாஜக மாநில தலைவராக கே சுரேந்திரன் நியமிக்கப்பட்டார். இவர், அப்படியே கேரளாவின் எச். ராஜா என்று கூறலாம். அந்த அளவிற்கு சர்ச்சையான கருத்துக்களை பேச கூடியவர். சபரிமலை போராட்டத்தில் இவர் பலர் நாட்கள் ஜெயிலில் இருந்தார். தற்போது அதேபோல் தமிழகத்தில் பாஜகவின் சர்ச்சை நாயகன், எச்.ராஜாவிற்கு பதவி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் என்ன
அதே சமயம் தலைவர் பதவி நியமிக்கப்பட்டாலும் கண்காணிப்பாளர் அல்லது பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதாவது எச். ராஜா தலைவராக இருப்பார். வேறு ஒரு வட இந்தியர், பெரும்பாலும் தலைவரை கண்காணிக்கும், ஆலோசனை வழங்கும் பிக்பாஸ் பொறுப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பிற்காக தமிழக பாஜக பெரும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது.