துப்பாக்கிக்கு துப்பாக்கியால் பதிலடி.. மங்களூர் சம்பவத்தை சம்பந்தமேயில்லாமல் நியாயப்படுத்திய ராஜா
சென்னை: துப்பாக்கிக்கு துப்பாக்கியால்தான் பதிலடி என மங்களூர் சம்பவத்தை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் டெல்லி மற்றும் பெங்களூரில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கைது செய்தனர். பல்வேறு பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
ராஜா சார்! நீங்கள் மசோதாவோட சாராம்சத்தையே புரிஞ்சிக்கலை.. தப்பான ஃப்ளோசார்ட் போட்டதால் வந்த வினை
துப்பாக்கிச் சூடு
இந்த நிலையில் கர்நாடகா மங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ்ஷீன்(23) மற்றும் ஜலீல் (49) ஆகியோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர்.
தனிமனித சுதந்திரம்
மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்னாள் மேயர் அஷ்ரபும் இந்த போராட்டத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தனி மனித சுதந்திரத்தை கேள்விக்குள்ளாகியுள்ளது.
துப்பாக்கிதான் பதிலடி
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது தேசிய பாஜக செயலாளர் எச் ராஜா மங்களூர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நியாயப்படுத்தினார். அவர் கூறுகையில் துப்பாக்கிக்கு துப்பாக்கியாலேயே எங்கள் பதிலடியாக இருக்கும்.
எண்ணமே இதுதான்
அவர்கள் இருவரும் 100 பேரை கொல்ல நினைத்தனர். அதனால் போலீஸாருக்கு வேறு வழி தெரியவில்லை. இதனால் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். ஒட்டுமொத்த போராட்டக்காரர்களின் எண்ணமே நாட்டை பற்றி எரிய விடுவதுதான்.
அனுமதி அளிக்காதீர்
சென்னை போலீஸாருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். வரும் 23-ஆம் தேதி திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் பேரணிக்கு அனுமதி அளிக்காதீர்கள். அவ்வாறு அளித்தால் நிச்சயம் வன்முறை ஏற்படும். மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்றார்.
சர்ச்சைக்குரிய கருத்து
பொதுவாக எல்லா விவகாரங்களிலும் எச் ராஜா சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் மங்களூர் துப்பாக்கிச் சூட்டில் இறந்த இருவரும் கற்களை வீசியதாகவே போலீஸார் கூறிய நிலையில் எச் ராஜாவோ சம்பந்தமே இல்லாமல் துப்பாக்கிக்கு துப்பாக்கிதான் பதிலடி என கூறியுள்ளார்.