இதுக்கும் திமுகதானா.. "தூண்டி விடாமல் சரக்கு மிடுக்கு பேச வாய்ப்பில்லை".. எச். ராஜா சொல்கிறார்!
திருமாவளவனை கைது செய் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்
சென்னை: "சரக்கு மிடுக்கு பேச்சு புகழ் திருமாவளவன், இந்த பெண்கள் விபச்சாரிகள் என்று பொய் பரப்பியுள்ள காலம் நவராத்திரி காலமாகும்... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத திமுக தூண்டிவிடாமல் இது நிகழ்ந்திருக்க வாய்பில்லை... இந்து விரோத திமுக வை தோற்கடிப்போம்" என்று எச்.ராஜா திமுகவை வம்புக்கிழுத்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
"மனுதர்மம் இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள்" என்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.
பெண்களை விபச்சாரிகளாக மனுதர்மம் சித்தரிக்கிறது, அதை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டத்திலும் விசிக குதித்துள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் திருமாவுக்கு ஆதரவு கரங்கள் தொடர்ந்து நீட்டப்பட்டும் வருகின்றன.
கடந்த 2 தினங்களாக திருமாவளவனின் இந்த பேச்சுதான் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.. ஆனால், இந்து பெண்களை திருமாவளவன் விபச்சாரிகள் என பேசிவிட்டதாக இந்து மத ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்...குறிப்பாக பாஜக கொந்தளித்துவிட்டது.
இப்படி பேசியதற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு தெரிவித்திருந்தார்.. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட பலரும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றும் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமாக திருமாவளவன் என்றாலே சற்று சூடாகும், எச்.ராஜா இந்த விஷயத்திலும் சற்று ஆவேசமாக கண்டனங்களை வெளிப்படுத்தி வருகிறார்.. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தனது சரக்கு மிடுக்கு பேச்சால் அனைத்து சமுதாய பெண்களை காமத்திற்கு அலைபவர்கள் என்றும் ஆண்கள் ஆண்மை அற்றவர்கள் என்று பேசிய தீயசக்தி திருமாவளவன் இன்று இந்து தர்மத்தில் பெண்களை விபச்சாரிகள் என்று கூறியுள்ளதாக பொய் பரப்பியுள்ளார்.இந்த சமூக விரோதியை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
அதென்ன அண்ணாமலைக்கு மட்டும்.. குஷ்புவுக்கு ஏன் இன்னும் தரலை.. பாஜகவில் என்ன நடக்கிறது?
இந்த பதிவுடன் எச்.ராஜா விடவில்லை.. அடுத்ததாக இன்னொரு பதிவையும் போட்டார்.. அதில், "சரக்கு மிடுக்கு பேச்சுப் புகழ் திருமாவளவன் இன்று ஸனாதன தர்மத்தில் பெண்கள் விபச்சாரிகள் என்று கூறியுள்ளதாக பொய் பரப்பியுள்ள காலம் நவராத்திரி காலமாகும். இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாத திமுக தூண்டிவிடாமல் இது நிகழ்ந்திருக்க வாய்பில்லை. இந்து விரோத திமுக வை தோற்கடிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
திமுக சொல்லாமல் இப்படி, திருமா செய்திருக்க வாய்ப்பில்லை என்று நேரடியாகவே திமுகவையும் உள்ளே இழுத்து விட்டுள்ளது பெரும் சலசலப்பை அரசியல் ரீதியாக ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாஜகவினர் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒருசிலரோ, "முதல்ல நோட்டாவை ஜெயிக்கிற வழியை பாருங்க.. தேர்தல் நெருங்கிடுச்சு, அங்கே டிரம்ப் நம்ம நாட்டு மானத்தை வாங்கிட்டு இருக்கார், அதை போய் கேளுங்க" என்றும் எச்.ராஜாவுக்கு பதிலடிகளை தந்து வருகிறார்கள்.