வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதுதான் அரசியலா.. இப்படி போய் விட்டார்களே நமது தலைவர்கள்!
கமல்ஹாசன் பேசியதற்கு எச் ராஜா, தமிழிசை சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ளனர்
Recommended Video
சென்னை: இப்போதான் ஒரு விஷயம் புரிகிறது.. தலைவர்கள் என்று நாம் தலையில் தூக்கி கொண்டாடுபவர்களிடம் அரசியல் நாகரீகம் கிஞ்சித்தும் தென்படவில்லையே என்பது!
கமல் ஒருகருத்தை சொன்னார், அது அவரது தனிப்பட்ட உரிமை.. கருத்து சுதந்திரம். அந்த கருத்து மற்றவருக்கு பிடிக்காவிட்டால், எதிர்கருத்தை தாராளமாக சொல்லலாம், இதுவும் கருத்துரிமைதான்! ஆனால் ஒரு வரைமுறை வேண்டாமா? வார்த்தை கடிவாளம் வேண்டாமா?
குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எச்.ராஜாவின் பேச்சுகள் உண்மையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
EXCLUSIVE: சசிகலா டீச்சர் இருந்தால் போதும்.. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவோம்.. பூரிக்கும் பெற்றோர்
அடிப்படை குணம்
கமலின் பேச்சினை அவர் விமர்சிக்கும்போது, வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர்" என்று கூறினார். "குமரியார் மகள் அரசியல் நாகரீகத்துடன் இருப்பார்.. மக்கள் விரோத கட்சியிலே அங்கம் வகித்தாலும் அவரது அடிப்படை குணம் ஒருபோதும் மாறாது" என்று கருணாநிதியால் புகழப்பட்டவர் தமிழிசை. ஆனால் கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்லி காட்டி விமர்சித்திருப்பது பெருத்த ஷாக்தான்!
விமர்சனம் செய்வாரா?
கமலின் சுயவாழ்க்கையை அவரது சிறு வயதிலிருந்தே தமிழகம் பார்த்து வரும் ஒன்றுதான். ஒளிவுமறைவின்றி வாழ்க்கையை அப்பட்டமாக வாழ்ந்து வருவதும் தெரிந்த சமாச்சாரம்தான். இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. இப்படி ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மூக்கை நுழைத்துதான் கருத்து பேச வேண்டும் என்றால், இதே அதிமுக, பாஜக, தேமுதிக கட்சி தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் தமிழிசை விமர்சிக்க தயாரா என்று தெரியவில்லை?
நிதானம்
அப்படி விமர்சித்தாலும், அந்த கூட்டணி கட்சிகள் தமிழிசையை எந்த அளவுக்கு ஏற்குமோ புரியவில்லை. எத்தனையோ முறை ஸ்டாலினுடனும், ஜோதிமணியுடனும், கருத்து மோதல் வரும்போதுகூட தமிழிசை நிதானத்தை தவறவில்லை. வார்த்தைகளை அளந்தே கவனத்துடன் பயன்படுத்தினார். ஆனால் கமல் விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி?
வன்முறை
இதேதான் ராஜேந்திர பாலாஜியும்! உளறல், சர்ச்சை என்பதுதான் இவருக்கு கிடைத்த பட்ட பெயர்கள். ஆனால் இப்போது வன்முறையும் சேர்ந்து கொண்டுள்ளது. இவரெல்லாம் எப்படி அமைச்சர் ஆனார் என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பும் அளவுக்கு கருத்து சொல்லி உள்ளார். நாக்கை அறுப்பேன் என்று பேசியதற்கு இதுவரை இவரிடமிருந்து வருத்தம் இல்லை என்றாலும், தான் சொல்லியதை நியாயப்படுத்தவே செய்கிறார்.
கி.வீரமணி
"கீழ்த்தரமான அரசியல் செய்கிறார் கமல்" என்று சொல்லும் இவர், நேற்று கமல்ஹாசனையும், கூடவே கி.வீரமணியையும் மிகக் காட்டமாக தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமமுக பிரமுகர் பெங்களூர் புகழேந்தி அவன் இவன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விமர்சித்துப் பேசி, குடித்து விட்டுப் பேசுகிறாரா என்று கேட்டு அவரது கட்சியின் அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தி விட்டுப் போனார்.
இந்துவின் பேரன்
இன்னொரு பக்கம் எச்.ராஜா.. இவரை எதுவும் சொல்றதுக்கு இல்லை. இவர் இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சரியமே. கோட்சேவை இந்துவின் பேரன் என கமல் சொல்லிவிட்டதால், கமலை ஜின்னாவின் பேரன் என்று ராஜா சொல்லுகிறார். இது மட்டும் பிரிவினைவாதம் இல்லையா? இது மட்டும் சந்தர்ப்பவாதம் இல்லையா? இதில் மட்டும் இனவாதம் தெரியவில்லையா?
கண்டிக்காதது ஏன்?
பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன் என்பது, பெரியார் சிலையை உடைப்பேன் என்பது இப்படியெல்லாம் தடித்த வார்த்தைகள் வரும்போதெல்லாம் பாஜக தலைமை ராஜாவை கண்டிக்கவில்லையே ஏன்? இந்து அமைப்பினர் காந்தி உருவபடத்தை துப்பாக்கியால் சுட்டபோது அப்போது யாரும் இப்படி அரிவாளை தூக்கி கொண்டு வரவில்லையே ஏன்?
இதுவா அரசியல் நாகரீகம்?
மற்றவர்களின் உணர்வுகளை தூண்டி அவர்களின் கோபத்தை கிளறி, ஆத்திரத்தை மண்டைக்கேற்றி அதனை வார்த்தைகளாக பிடுங்கி அதில் குளிர்காயத்தான் பலரும் நினைக்கிறார்கள். ஆக, அரசியல் நாகரீகம் என்பது கிலோ என்ன விலைக்கு என்ற ரேஞ்சுக்கு மகா மட்டமாக போய் விட்டதுதான் அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருக்கிறது. இதே மண்ணில்தான் ராஜாஜியும் இருந்தார், பெரியாரும் இருந்தார், அண்ணாவும் இருந்தார். மூன்று பேருமே எப்படி இருந்தார்கள் என்பது வரலாறு.. அதை படிங்கப்பா இன்றைய தலைவர்களே முதலில்!