சூட்டை கிளப்பும் எச். ராஜா.. கம்யூனிஸ்டுகளுக்கு திமுக கொடுத்த ரூ. 25 கோடி.. விசாரணை நடத்துங்க!
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் கணக்கு குறித்து எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "தேர்தலுக்காக 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து 25 கோடி திமுகவிடமிருந்து பெற்றிருக்கும் விவகாரத்தில், அதை இரு கட்சிகளும் எப்படி செலவழித்தன என்கிற கணக்கு பற்றி தேர்தல் கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.
தேர்தல் ஆணையத்தில் திமுக தேர்தல் கணக்கு சமர்ப்பித்தபோது, லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட சிபிஐ, சிபிஎம் இந்த 2 கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் சேர்ந்து 25 கோடி ரூபாயை தேர்தல் நன்கொடை அளித்ததாக தெரிவித்திருந்தது. இதேபோல, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியும் ரூ.15 கோடி வழங்கியதாக திமுக கணக்கு சமர்ப்பித்தது.
இது சம்பந்தமாக தனியார் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. அத்துடன், இடதுசாரி கட்சிகள் தேர்தல் செலவு தொடர்பான தங்களின் பிரமாண பத்திரத்தில் இதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று கூடுதல் செய்தியாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
சிபிஎம்
இந்த விவகாரம் மிகப்பெரிய விவகாரமாக வெடிக்க ஆரம்பித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக ஏன் பணம் தர வேண்டும் என்ற கேள்வி பரபரத்தது. இதனால், உடனடியாக நன்கொடை தொடர்பான செய்தியை மறுத்து, சிபிஎம் தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்தது.
விளக்கம்
"இந்த செய்தி பொய்.. திரித்துக் கூறப்பட்ட ஒன்று.. லோக்சபா தேர்தல் சமயத்தில், எங்கள் கட்சியால் பெறப்பட்ட அனைத்து நன்கொடைகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது, அதனால் இந்த விஷயத்தில் மறைப்பதற்கு ஏதும் இல்லை. எல்லாம் வெளிப்படையான முறையில் செய்யப்பட்டது" என்று தெளிவுபடுத்தியது.
அறிக்கை
இந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் கணக்குகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும்போது சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் சிபிஎம் உறுதிபட அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
எச்.ராஜா
தற்போது இதை எச். ராஜா கையில் எடுத்துள்ளார். இது சம்பந்தமாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார். அதில், "தேர்தலுக்காக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து 25 கோடி திமுகவிடமிருந்து பெற்றிருக்கின்றன என்று ஆவணங்கள் கூறுகின்றன. அதை இரு கட்சிகளும் எப்படி செலவழித்தன என்கிற கணக்கு பற்றி தேர்தல் கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
|
செலவு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் கணக்குகள் குறித்த அறிக்கை வெளியிடும்போது சரி பார்த்து கொள்ளலாம் என்று கம்யூனிஸ்ட்கள் ஆணித்தரமாக சொல்லி உள்ளபோது, எச்.ராஜாவின் வேண்டுகோள்படி, இதை தேர்தல் கமிஷன் தலையிட்டு, எப்படி 2 கட்சிகளும் அந்த பணத்தை செலவு செய்தார்கள் என்ற விசாரணைக்கு உத்தரவிடுமா என தெரியவில்லை. எனவே இந்த விவகாரம் முழுக்க தேர்தல் ஆணையத்தின் கையில்தான் உள்ளது.
|
ஜனநாயகம்
என்றாலும்.. கம்யூனிஸ்டுகள் என்றாலே உண்டியல் குலுக்கி தேர்தலில் நிற்பவர்கள் என்ற காலம் போய்.. இப்போது, தேர்தலில் நிற்பதற்கு முன்னமேயே இப்படி கோடிக்கணக்கில் பணம் பெறுவது சரியா என்ற கேள்வியும் இயல்பாகவே நம்மிடம் எழுகிறது. அப்படி பணம் வாங்கி தேர்தலை சந்திக்க உதவுவது எந்தவிதத்திலும் ஜனநாயகத்தை வளர்க்காது என்பதுதான் யதார்த்த உண்மை.. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி!