தீரன் சின்னமலையே திப்பு சுல்தானுடன் இணைந்துதானே போரிட்டாருங்கண்ணா...!
சென்னை: பாஜகவினர் தினுசு தினுசா கிளப்பும் விவகாரங்கள் எல்லாமே அடேங்கப்பா ரகங்களாக இருக்கின்றன.
கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா அரசு சார்பாக நடைபெற்று வந்தது. இதை தற்போதைய முதல்வர் எடியூரப்பா ரத்து செய்திருக்கிறார்.
திப்புசுல்தான் மத மாற்றம் செய்தவர்; இந்துக்களை படுகொலை செய்தவர்; இஸ்லாமிய மதவெறியர் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு முத்திரை குத்தி தள்ளுகின்றனர் பாஜக நிர்வாகிகள். பாஜகவினரின் இந்த ஆவேசம் அடங்குவதற்குள் இன்றைய பொழுது விடிந்துவிட்டது.
இன்று காலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, சிப்பாய் கலகத்துக்கு முன்னரே விடுதலைப் போரை நடத்திய தீரன் சின்னமலை நினைவுநாளை இன்று நினைவு கூறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இங்குதான் விசித்திரமான குழப்பம் வந்து நிற்கிறது.. தீரன்சின்னமலை வரலாற்றின் பக்கங்களில் எப்படி இடம்பெறுகிறார்? முஸ்லிம் மதவெறி பிடித்தவராக கூறப்படும் ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தானுடன் இணைந்து போரிட்டு வெள்ளையரை விரட்டியடித்தவர் என்று அல்லவா வரலாறு சொல்கிறது.
சிப்பாய் கழகம் நடப்பதற்கு முன்னே ஆங்கிலேர்களை நம் மண்ணில் இருந்து துரத்தியடித்த விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையை இன்று நினைவு கூறுவோம்.
— H Raja (@HRajaBJP) July 31, 2019
Let us remember #DheeranChinnamalai today on his Memorial Day, who eliminated the British from our soil even before Sepoy Mutiny. pic.twitter.com/S75Tgy00Q4
ஆக திப்பு சுல்தான் வேண்டாம்; திப்பு சுல்தானுடன் இணைந்து போரிட்ட தீரன் சின்னமலை மட்டும் வேண்டும் என்கிறது பாஜக. அதேபோல் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் இல்லாது போயிருந்தால் அல்லது மதவெறியர்களாக இருந்திருந்தால் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் நமக்கு இல்லாமலே போயிருப்பார்கள் என்கிறது வரலாறு.
ரொம்பக் குழப்பமா இருக்குல்ல.. அப்படித்தான் இருக்குமோ கொஞ்ச காலத்துக்கு!!