சிஏஏ விவகாரம்.. ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு நன்றி.. சந்திப்புக்கு பின் அபுபக்கர் அதிரடி பேட்டி!
ரஜினிகாந்தை இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசினார்
சென்னை: இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபக்கர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய அபுபக்கர், ரஜினிக்கு நாங்கள் நன்றி தெரிவித்தோம். அவரது பேச்சு நம்பிக்கை தருவதாக கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சிஏஏ சட்டம் குறித்த விளக்கம் தொடர்பாக இஸ்லாமிய பிரதிநிதிகளை சந்திக்க விரும்புவதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
அதன்படியே இன்று அபுபக்கர் உள்ளிட்டோரிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். தன் ஒரே பேட்டியினால் மொத்த பேரையும் அதிர வைத்த ரஜினி, இப்போது இந்த சந்திப்பினால் அடுத்த கட்ட "அரசியல்" நகர்வினை துவக்கி உள்ளார்!
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் சிஏஏ கருத்துக்கு ஆதரவாக கருத்து சொன்னதுமே பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. சிஏஏ சம்பந்தமான கருத்து முழுக்க முழுக்க பாஜகவின் கருத்தாகவும் பார்க்கப்பட்டது.. இந்த அதிர்வலை இஸ்லாமிய அமைப்பினரிடையே அதிகமாகவே ஏற்பட்டதை காண முடிந்தது. தமிழ்நாடு ஜமாத்துல் அல் உலமா சபை என்கிற அமைப்பு அறிக்கை மூலம் ஒரு வேண்டுகோளே விடுத்திருந்தது.
கருத்துக்கள்
அதில், "மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ சட்டம் மற்றும் என்ஆர்சி, என்பிஆர் திட்டங்கள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு தரப்பு கருத்துகளை மட்டுமே ரஜினி பிரதிபலித்துள்ளார். பெரும்பான்மை மக்களின் கருத்துகளில் உள்ள நியாயத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. சட்ட வல்லுநர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், நாட்டில் உள்ள பெருவாரியான அரசியல் கட்சியினர், முஸ்லிம் மதகுருமார்கள், ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் இதன் விளைவை புரிந்துகொண்டு, ஒன்று திரண்டு கடந்த 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
விளக்கம்
15 மாநிலங்களின் முதல்வர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூண்டி விடுகிறார்கள், பீதியைக் கிளப்புகிறார்கள் என்பது போன்ற வார்த்தைகள் ஒரு பெரும் மக்கள் இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். ஜனநாயக ரீதியாகப் போராடுகிற மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்ற பழியில் இருந்து அவர் விடுபட வேண்டும். ரஜினியைச் சந்தித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை திட்டமிட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
நிர்வாகி
இந்த அறிக்கை ரஜினியின் பார்வைக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது.. இதையடுத்து நிர்வாகி அன்வர் பாஷா உலவியை ரஜினிகாந்த் செல்போனில் அழைத்து பேசினார்.. "உங்கள் கண்ணியமிக்க அறிக்கை என்னைக் கவர்ந்தது... உங்கள் ஆட்களை சந்தித்து பேச நான் விரும்புகிறேன்.. விரைவில் நேரம் ஒதுக்கி கூப்பிடுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
போயஸ் கார்டன்
இதனால் அநேகமாக இஸ்லாமிய மதகுருமார்கள் இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் ரஜினிகாந்தை இன்று அல்லது நாளையே கூட சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபக்கர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.
நிலைப்பாடு
சிஏஏ சட்டத்தால் ஏற்படக்கூடிய ஆபத்து, இஸ்லாமியர்கள் சந்திக்க நேரிடும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ரஜினியிடம் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. அதேபோல, ரஜினியும் தனது தரப்பு நிலைப்பாட்டை விளக்கியதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட மத்திய அரசு சார்பிலான கருத்துக்களை ரஜினி முன்வைத்ததாகவும், மத்திய அரசுத் தரப்பிலிருந்து தனக்கு கிடைத்த உத்தரவாதத்தை தெரிவித்து விளக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
நன்றி
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த அபுபக்கர், ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. சிஏஏ சட்டத்தை ஆதரிப்பதாக கூறிய ரஜினியின் பேச்சை நாங்கள் எதிராக பார்க்கவில்லை. அவரது கருத்து அது. அவர் சொன்னதை உள்நோக்கத்துடன் பார்க்கக் கூடாது. மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு வந்தால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம், நன்றி சொல்கிறோம். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சூப்பர் ஸ்டார் என்று கூறினார் அபுபக்கர்.
பரபரப்பு
அதேசமயம், ரஜினி என்ன மாதிரியான விளக்கத்தைக் கொடுத்தார் என்பதை அபுபக்கர் செய்தியாளர்களிடம் விரிவாக கூறவில்லை. அபுபக்கர் கூறியுள்ள கருத்துக்களைப் பார்த்தால் ரஜினி தரப்பு முதல் ஆளாக அபுபக்கரை தங்கள் பக்கம் கொண்டு வந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.