ஹஜ் யாத்திரை... பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
சென்னை: இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேருக்கு கூடுதலாக ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது: "கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை 3,542 ஆக இருந்தது. ஆனால் எனது கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை
செல்பவர்களின் எண்ணிக்கையை 3,816 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்ல 3,534 ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு இந்த ஆண்டு இப்போதே 6,379 விண்ணப்பங்கள் வந்துள்ளது. எனவே, இப்போது ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும், தேவைப்படும் இடங்களுக்களுக்கும் நிறைய இடைவெளி உள்ளது.
எனவே, தமிழ்நாட்டு ஹஜ் யாத்திரிகர்கள் கூடுதல் பயன்பெறும் வண்ணம், இன்னும் கூடுதலாக 1,500 இடங்களை ஒதுக்கி தாருங்கள். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தாங்கள் ஆவண செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.