லட்சுமணன் உயிர் காக்க சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்த அனுமன்...இப்போது வைரல் ஆவது ஏன் தெரியுமா
இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் தாக்கி மயக்கமான லட்சுமணன் உயிரை காக்க சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார் அனுமன். சஞ்சீவி மூலிகை போல கொரோனா தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு பிரேசில் பிரதமர் நன்றி
சென்னை: இந்தியாவின் இதிகாசமான ராமாயணத்தில் உயிர்காக்கும் சஞ்சீவி முலிகை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ராம ராவண யுத்தத்தில் இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் தாக்கி மயக்கமான லட்சுமணன் உயிரை காக்க சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார் அனுமன். உயிரைக் காக்கும் அனைத்துமே சஞ்சீவிதான். கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மக்களை காக்கும் எந்த மருந்துமே சஞ்சீவிதான். எனவேதான் கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்து பிரேசிலுக்கு அனுப்பிவைத்ததற்காக பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுமனையும் சஞ்சீவி முலிகையையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.
ராமாயணம் படித்தவர்களுக்கும் தொலைக்காட்சிகளில் சீரியல்களாக பார்த்தவர்களுக்கும் யுத்த கள காட்சியை மறந்திருக்க முடியாது. சீதையை மீட்க வானர சேனையோடு இலங்கைக்கு தனது தம்பி லட்சுமணன், அனுமனுடன் சென்றார் ஸ்ரீராமர். தினம் தினம் போர் உக்கிரமாகவே நடைபெற்றது. சீதை எப்படியாவது மீட்டாகவேண்டும் என்பதால் ராம லட்சுமணர் தலைமையில் வானர சேனையும், ராவண சேனையும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
செஞ்சோற்று கடன் தீர்க்க தன் அண்ணனுக்காக ராமரை எதிர்க்க வந்த கும்பகர்ணன் இறந்து விட்டான். ராவணன் பக்கத்தில் பலரும் மாண்டு விட்டனர். குடும்பத்தில் உள்ளவர்களை அடுத்தடுத்து போருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான் ராவணன். தனது புதல்வன் மேகநாதன் என்ற இந்திரஜித்தை போருக்கு அனுப்பி வைத்தான். அவனோ மாயங்கள் புரிந்து போர் செய்பவன்.
அம்பு எந்த பக்கமிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாத வகையில இந்திரஜித், தன்னை எதிர்த்த வான சேனையை பயங்கரமாக தாக்கினான். அவன் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் வானர படைகளைச் சேர்ந்த பலர் சிதறி விழுந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். பலர் உயிரிழந்தனர்.
வானர சேனையை சிதறடித்த இந்திரஜித், பிரம்மாஸ்திரத்தை எடுத்து லட்சுமணனை குறிவைத்தான். அது சீறிப்பாய்ந்தது. பாய்ந்து செல்லும்போது வழியில் இருக்கும் அனைவரையும் தாக்கியபடி பறந்து சென்றது அந்த அம்பு. இறுதியாக லட்சுமணனை தாக்கியது. பிரம்மாஸ்திரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் மண்ணில் மயங்கி சரிந்தான் லட்சுமணன். இதனை பார்த்ததும் ராமர் ஓடி வந்தார். தனது தம்பியின் உயிர் காக்க என்ன செய்வது என்று யோசித்தார்.
அனுமனை அழைத்து புதிய கட்டளை ஒன்றை பிறப்பித்தார். அனைவரையும் பிழைக்க வைக்க ஒரு வழி உள்ளது. அது உன்னால் மட்டுமே முடியும் என்று சொன்னார். இமயமலை பகுதியில் சஞ்சீவி மலை ஒன்று உள்ளது. அதில் பல அதிசய மூலிகைகள் இருக்கின்றன. இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மூலிகை, சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மூலிகை என்று தனித்தனியாக உள்ளது. அங்கு சென்று அந்த மூலிகைகளை கொண்டுவா. தாமதம் பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும். விரைந்து வா என்று சொல்லி முடித்த விநாடியே பறந்து போனார் அனுமன்.
பறந்து சென்ற அனுமன் சஞ்சீவி மலையை அடைந்து விட்டார் அங்கு இருந்த பல மூலிகைகளில், எது ஸ்ரீராமர் சொன்ன மூலிகை என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. யோசிக்கவேயில்லை மலையை பெயர்த்து எடுத்தார். கையில் ஏந்திக்கொண்டு பறந்து இலங்கைக்கு சென்றார். நினைத்து பாருங்கள். இமயமலையில் இருந்து இலங்கைக்கு சட்டென்று பறந்து போய்விட்டார். அந்த மலையில் இருந்த மூலிகைகளின் காற்றை சுவாசித்ததுமே பலரும் உயிர் பிழைத்தனர். பலரது காயங்கள் மாயமாகிப் போனது. உறுப்புகள் இழந்தவர்கள் உறுப்புகளை பெற்றனர்.
மயங்கியிருந்த லட்சுமணன் சஞ்சீவி மூலிகை காற்றை சுவாசித்ததும் தூக்கத்தில் இருந்து விழிப்பது போல விழித்தெழுத்தார். இதைப்பார்த்த ராமரின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகியது. அவர் தம்பியை தழுவிக்கொண்டார். தம்பி பிழைக்க காரணமாக இருந்த தனது அன்புக்கு பாத்திரமான அனுமனையும் கட்டித் தழுவிக்கொண்டார்.
- Namaskar, Primeiro Ministro @narendramodi
— Jair M. Bolsonaro (@jairbolsonaro) January 22, 2021
- O Brasil sente-se honrado em ter um grande parceiro para superar um obstáculo global. Obrigado por nos auxiliar com as exportações de vacinas da Índia para o Brasil.
- Dhanyavaad! धनयवाद pic.twitter.com/OalUTnB5p8
கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்து பிரேசிலுக்கு அனுப்பிவைத்ததற்காக பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுமனையும் சஞ்சீவி முலிகையையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ஹனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்தது போன்ற படத்தைப் போட்டு அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் தடுப்பூசி வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.