இரக்க குணம், வெள்ளந்தி மனசு.. தமிழோடும் இசையோடும்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'தமிழிசை அக்கா'
சென்னை: தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன், இரக்க குணமும், வெள்ளந்தி மனசும் கொண்டவர் என்பதை அவருக்கு எதிராக அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். பாஜகவினரால் அக்கா என அன்புடன் அழைக்கப்படும் தமிழிசை அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தான் கொண்ட கொள்கையில் எப்பாதும் உறுதியானவர் தமிழிசை, எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் உடனுக்குடன் பதிலடி தருவதில் கெட்டிக்காரர். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல விஷயங்களில் கடுமையான பதிலடிகளை கொடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் பரப்பப்பட்ட பிரச்சாரங்களை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டார் தமிழிசை. அதற்காக அவர் எடுத்த பிரச்சார யுக்திகள் கவனத்தையும் பெற்றன.
பழைய போட்டோக்களை தேடி பிடித்து போடுவது.. பின்னர் வாங்கி கட்டி கொள்வது.. இந்த எச் ராஜாக்கு இதே வேலை
ஜெட் ஏர்வேஸ் விமான அதிபர்
நாட்டில் பொருளாதார குற்றவாளிகள் பிரதமர் மோடி ஆட்சியில் தப்பி ஓடிவருவதாக தகவல்கள் பரப்பப்பட்டன.இதற்கு பதிலடியாக தமிழிசை சவுந்திரராஜன் "புறப்படத் தயாரான விமானத்தை நிறுத்தி நாட்டைவிட்டு ஓட இருந்த பொருளாதார குற்றவாளி முன்னாள் ஜெட் ஏர்வேஸ் விமான அதிபர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கைது செய்தது என பதிலடி கொடுத்தார்.
கூடுதலாக 350 MBBS இடங்கள்
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நீட் தேர்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தது. இதனால் தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு பாஜக தலைமை எடுத்துச்சென்றதால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற தமிழகத்திற்கு கூடுதலாக 350 MBBS இடங்களும் ,508 மருத்துவ மேற்படிப்பு இடங்களை புதிதாக தொடங்க இப்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
2 லட்சம் வாக்குகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், துணிந்து களம் இறங்கியதோடு, மக்களிடம் வாக்குகளை பெற முடியும் என்று அங்கு களம் இறங்கினார். திமுகவின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு எதிராக பாஜக சார்பில் களம் இறங்கிய தமிழிசை, அங்கு சுமார் 2 லட்சம் வாக்குகள் பெற்றார்.
ஐசிஎப் பெட்டி தொழிற்சாலை
தமிழகத்தில் இந்தி தெரிந்தவர்கள் அதிக அளவு ரயில்வே பணியில் இருப்பதாகவும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் எதிர்ப்புகள் எழுந்தன. இதுபற்றி செய்திகள் வெளியான உடன் தமிழிசை சவுந்தரராஜன், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் பேசி தமிழகத்தில் ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று சென்னை ஐசிஎப் ரயில்வே பெட்டி தொழிற்சாலைக்கான 510 அப்பரண்டிஸ் பணிக்கு தமிழக வேலைவாய்ப்பு அலுலவகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என ரயில்வே துறை அறிவித்தது. இதில் வட மாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படவில்லை.
மருத்துவ முகாம்
தூத்துக்குடி லோக்சபா தேர்தலின்போது, தான் தங்கியிருந்த வீட்டில் வேலை செய்தவர்களின் மகளுக்கு சர்ப்ரைஸாக சைக்கிளைப் பரிசளித்து அசத்தினார் தமிழிசை செளந்தரராஜன். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழிசை சென்றபோது பொதுமக்கள் அவரிடம் அப்பகுதியில் சிறுவயதிலேயே சிறுநீரகப்பிரச்சினை மற்றும் பெண்களுக்கான மருத்துவ உதவி கேட்டு கோரிக்கை விடுத்து இருந்து இருக்கிறார்கள். அவர்களிடம் அப்போது மருத்து முகாம் நடத்துவதாக சொல்லி இருக்கிறார். அதன்படி இன்று அவரது பிறந்த நாளில் இலவச மருத்துவ முகாம் நடத்தியும் உள்ளார்.
கடுமையான பிரச்சாரங்கள்
பாஜகவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வரும் இந்த சூழலிலும் நிதானமாக, ஆழமான பதில்களை அளித்து வருகிறார் தமிழிசை சவுந்திரராஜன். ஊடகங்களின் எடக்குமடக்கான கேள்விகளுக்கு சமார்த்தியமாக பதில் அளிப்பதில் தமிழிசை வல்லவர்தான். தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழிசை அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.