"அண்ணே, விடுங்க.. அவங்க இருக்காங்கள்ல".. வைகோவையே விக்கித்து போக வைத்த ஸ்டாலின்.. என்னாச்சு..!
திமுக கூட்டணியில் வைகோவுக்கு 10 சீட் ஒதுக்கப்படும் என்கிறார்கள்
சென்னை: திமுக கூட்டணியில் யார் யார் இடம் பெறுகிறார்கள் என்பது இப்போது வரை சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.. இருந்தபோதிலும் யார் மனசையும் ஸ்டாலின் கஷ்டப்படுத்த விரும்பவில்லையாம்.. அதனால் ஒரு சுமூக முடிவு விரைவில் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை தேர்தலில் ஐபேக்கின் வியூகங்கள் படியும், யோசனைகள்படியும்தான் திமுகவின் போக்கு அமைந்து வருகிறது.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, பெரும்பாலான இடங்களில் திமுகவே போட்டியிட வேண்டும் என்பதுதான் ஐபேக்கின் ஆரம்பத்தில் இருந்தே எடுக்கப்பட்ட முடிவு.
அதற்காக கூட்டணிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
மதிமுக
ஆனாலும், தங்கள் கட்சிகளின் தனித்தன்மை இழக்க விரும்பாத மதிமுகவும், விசிகவும் கையை பிசைந்து நிற்கின்றனர்.. விசிகவுக்கு தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி ஓரளவு இருப்பதால், இவ்வளவு காலம் திமுகவின் அனைத்து ஆர்ப்பாட்டம், போட்டங்களிலும் உடனிருந்து ஆதரவு தந்து வருதால், கூடுதல் சீட் கேட்டு நெருக்கி கொண்டிருக்கிறது.
அதிர்ச்சி
இதேதான் வைகோவும் நிலைமையும்.. முதலில் 20 சீட் கேட்டிருக்கிறார் வைகோ.. பிறகு 16 சீட் கேட்டிருக்கிறார்.. அதாவது இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாகவே இருந்து வருகிறார்.. ஆனால், வெறும் 2 சீட்தான் தரப்படும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டதாம்.. இதை கேட்டு வைகோ முதலில் அதிர்ந்து போய் உள்ளார். இதன்பிறகுதான் மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தபோது, மாவட்ட செயலாளர்களுடன் மனம் விட்டு தனியாக பேசி உள்ளார்.
தைரியம்
அப்போது வைகோ, "சீட்டு விவகாரத்தில் நானும் ஸ்டாலினும்தான் தனியாக பேசினோம்.. அது எங்களுக்கு மட்டுமே நடந்த சந்திப்பு.. அண்ணே.. சீட்டு பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க.. ஓரளவு குறிப்பிடும்படியான இடங்கள் கிடைக்கும்.. மத்தவங்களும் இருக்காங்களே.. அவங்களையும் பார்க்க வேண்டி உள்ளது.. தைரியமா இருங்க.. பார்த்து பண்ணிக்குவோம்"ன்னு சொல்லி இருக்கார்.. அதனால நீங்க எல்லாரும் துரிதமாக வேலையில் இறங்குங்க" என்றாராம் வைகோ.
பிடிவாதம்
உண்மையிலேயே ஸ்டாலின் வைகோ விஷயத்தில், கூடுதல் இடம் ஒதுக்கவே விரும்புகிறாராம்.. 2 சீட் என்ற தகவல்கள் காற்று வாக்கில் கசிந்து கொண்டிருந்தாலும், எப்படியும் வைகோவுக்கு அதற்கு மேலும் தொகுதிகளை ஒதுக்கவே முடிவு செய்துள்ளாராம்.. அதிலும் வைகோ இரட்டை இலக்கு என்ற விஷயத்தில் பிடிவாதமாக இருப்பது தெரிந்ததும் 10 சீட்டாவது அக்கட்சிக்கு ஒதுக்கலாம் என்றும் யோசித்து வருகிறாராம்.
மக்கள் நல கூட்டணி
ஒருவேளை ஸ்டாலின், மதிமுகவுக்கு இந்த அளவுக்கு சீட் ஒதுக்குவாரானால் நிஜமாகவே அது ரொம்ப பெரிய விஷயம்தான்.. தன் வளர்ச்சியை பிடிக்காமல் கலைஞரிடம் எதிர்த்து கொண்டு மதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தவர் வைகோ என்று தெரிந்தாலும், மக்கள் நல கூட்டணி என்ற ஒன்றை ஆரம்பித்து, திமுகவின் வாக்குகளை பிரித்து, ஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணை அள்ளி போட்டவர் என்ற விமர்சனங்கள் அன்று எழுந்திருந்தாலும்.. இவை எல்லாவற்றையும் ஸ்டாலின் மறந்துவிட்டு, தாராளம் காட்டுவது அவரது பெருந்தன்மை என்கிறார்கள் உடன்பிறப்புகள்.