ஹத்ராஸ் பாலியல் சம்பவம்... ஆளுநர் மாளிகை நோக்கி...திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி!!
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி தலைமையில் சென்னை, சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி துவங்கியுள்ளது.
Recommended Video
பேரணியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மகளிர் ''பெண்கள் பாதுகாப்பு'' என்ற வாசகம் எழுதப்பட்ட முகக் கவசத்தை அணிந்து, மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகே இந்தப் பேரணி துவங்கி, கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகை நோக்கி செல்கின்றனர். பேரணி துவங்குவதற்கு முன்பு பேசிய எம்பி கனிமொழி, ''கொரோனா கால கட்டத்திலும் இங்கு வந்து இருக்கும் தலைவருக்கும், உங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உத்தரப் பிரதேசத்தில் பயங்கரமான பாலியல் வன்கொடுமை நடத்துள்ளது. தலித் பெண்ணின் முதுகெழும்பு உடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு இருக்கிறார். அங்குள்ள அரசாங்கம் அந்த சம்பத்தை மூடி மறைத்துக் கொண்டுள்ளது. எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்தார்கள். பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை.
நிர்பயா உயிரிழப்புக்குப் பின்னர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க பல சட்டங்கள் வந்து விட்டன. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. பாரத் மாதா கி ஜெய் என்று கூறும் உத்தரப் பிரதேசத்தில் இந்த பாலியல் வன்முறை நடக்கிறது. அங்கு இருக்கும் முதல்வர் பெண்களை பாதுகாக்க மறுக்கிறார். இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது'' என்றார்.
இவரைத் தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசுகையில், ''இந்தப் பேரணியை துவக்கி வைத்து இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. அப்பாவி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி சென்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து நான்கு முறை ராகுல் காந்தி எம்பியாக இருந்து வருகிறார். அவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. மற்றவர்களின் நிலையை உத்தரப்பிரதேசத்தில் நினைத்துப் பாருங்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகமாக நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் அப்பாவி இளம்பெண்கள் 4 பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். உத்தரப்பிரதேசம் இன்று ரத்தப்பிரதேசமாக மாறிக்கொண்டு இருக்கிறது; இதை தடுக்க வேண்டும்.
#SaveOurDaughters - மகளிரணியின் பேரணியை தொடங்கி வைத்து உரை. https://t.co/QFWMJMd80m
— M.K.Stalin (@mkstalin) October 5, 2020
பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. இதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாளர்கள் என்பதுதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்கப்படும். எனது சகோதரி தலைமையில் நடக்கும் இந்தப் பேரணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கொரோனா காலத்தில் சமூக இடைவெளி முக்கியம். முகக் கவசம் முக்கியம், கையில் முழுகுவர்த்த்தி ஏந்தி செல்ல இருக்கிறீர்கள். பத்திரமாக் செல்ல வேண்டும்'' என்றார்.
மேடையிலேயே மெழுகுவர்த்தி ஏற்றி பேரணியை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில் திமுக கட்சி சார்பில் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.