தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி.. ஓராண்டு சிறை.. ஒரு மாதத்திற்கு தண்டனை நிறுத்தி வைப்பு
Recommended Video
சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பதாகவும் சென்னை சிறப்பு நீதிமன்றம் பரப்பரப்பு தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் வைகோவின் வழக்கறிஞர் விதித்த கோரிக்கையை ஏற்று தீர்ப்பு ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவிலும் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. வைகோ மீதான இந்த தேசதுரோக வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த மாற்றப்பட்டது.
வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் அங்கு நீதிபதி சாந்தி என்பவர் வைகோ மீதான தேசதுரோக வழக்கை விசாரித்து வந்தார். இவ்வழக்கில் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு, அரசு தரப்பு சாட்சிகளிடம் சாட்சி விசாரணைகள் நடைபெற்றன. பின்னர் சாட்சியங்களின் அடிப்படையில் வைகோவிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து வைகோவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேசதுரோக வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் சமீபத்தில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வைகோ. விரைவில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேசதுரோக வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபனமாகி வைகோவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படுமாயின், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் இருந்தது. இதனால் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கும் வைகோ போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்தது
இந்நிலையில் தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை காலம் ஓராண்டு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரால் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வைகோவின் வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.