நீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி
Recommended Video
சென்னை: தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக் கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சமீப காலமாக மருத்துவ படிப்பில் சேர பல முறைகேடுகள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மாணவர் உதித் சூர்யா மோசடி செய்த விவகாரத்தை சுட்டிக்காட்டினர்.
மேலும், ஆள்மாறாட்டம் மூலமாக எத்தனை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்? நீட் தேர்வு எழுதும் போது மாணவர்கள் காண்பிக்கும் அடையாள அட்டையும் அதே மாணவர்கள் கல்லூரியில் சேரும் போது காண்பிக்கும் அடையாள அட்டையும் ஆய்வு செய்யப்படுகிறதா..? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மீண்டும் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடி'யுடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் 4250 மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்யுமாறும், மாணவர்களின் ஆடை, தலைமுடி, கழுத்து வரை சோதனை செய்த அதிகாரிகள், முகத்தை சோதனை செய்யாமல் விட்டுவிட்டார்களா என கேள்வி எழுப்பினர்.
ஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்
இதையடுத்து கைரேகை மட்டுமல்லாமல் முகத்தை பதிவு செய்யும் வகையில் கருவிகள் பொருத்த வேண்டும். ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கும் மாணவர்களை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிட கூடாது என்று உத்தரவிட்டனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி அளித்த பதிலில், இது வரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதால் வழக்கில் சிபிஐ'யை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், எதிர்காலத்தில் நியாயமான முறையில் நீட் தேர்வு நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை வரும் 24 தள்ளி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.