அரசு பஸ்கள் சரியில்லை.. பராமரிக்கப்படுவதில்லை.. சென்னை ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: அரசு பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சண்முகம் வோல்டாஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2011 ஆண்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்னை ராஜாஜி சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது மாநகர பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பின்னர் மரணமடைந்தார்.
இதையடுத்து, தனக்கு இழப்பீடு வழங்க கோரி சண்முகத்தின் மனைவி சென்னை வாகன விபத்து இழப்பீடு வழக்கு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சண்முகத்தின் மனைவிக்கு ரூ. 45 லட்சத்து 29,680 இழப்பீடு வழங்குமாறு 2015ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகர பேருந்து நிர்வாக இயக்குனரும், இழப்பீட்டை அதிகரிக்க கோரி சண்முகத்தின் மனைவியும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், விபத்தில் பலியான சண்முகம் ஒரு பெரிய நிறுவனத்தில் மாதம் ரூ.61 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளார். இளம் வயதான அவரை நம்பி மனைவி உள்ளார். எனவே, இழப்பீடு தொகையை இந்த நீதிமன்றம் ரூ.1 கோடியே 6 லட்சத்து 20,000மாக அதிகரித்து உத்தரவிடுகிறது என்று உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது: மக்களின் சேவைக்காகவும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தவும் 1969ல் பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசிய உடமையாக்கினார். அதேபோல்தான் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகங்களை தமிழக அரசு அரசுடமையாக்கியது. ஆனால், தனியார் பேருந்துகளை போல் அரசு பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. அதனால்தான் மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்த தொடங்கினர்.
அரசு பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பதுடன் அந்த பேருந்துகளை இயக்குபவர்களும் சாலை விதிகளை மதிப்பதில்லை. பெரும்பாலும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் கவனக் குறைவாகத்தான் பேருந்துகளை ஓட்டுகிறார்கள். இதனால்தான் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இவர்களை காக்க தொழிற்சங்கங்கள் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால், போக்குவரத்து கழகங்கள் அரசுடமையாக்கப்பட்டதன் நோக்கமே வீணாகிவிட்டது. எனவே இந்த விஷயத்தில் அரசுக்கு இந்த நீதிமன்றம் கீழ்கண்ட கேள்விகளை எழுப்புகிறது:
- கடந்த 10 ஆண்டுகளில் அரசு போக்குவரத்து பேருந்துகளால் எத்தனை விபத்துகள் ஏற்பட்டுள்ளன?
- எத்தனை பேர் இந்த விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்?
- எத்தனை பேர் இழப்பீடு கோரியுள்ளனர்?
- எத்தனை பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது?
- விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர்கள் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
- எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்?
- பேருந்துகள் சரியாக பாரமரிக்கப்படாததற்கான காரணம் என்ன?
- போக்குவரத்து கழகத்தின் நிர்வாக திறமையின்மை தான் காரணமா?
- தனியார் பேருந்துகளுக்கு நிகராக அரசு பேருந்துகளை ஏன் இயக்க முடியவில்லை?
- பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்டதை மாற்றும் எண்ணம் உள்ளதா?
இந்த கேள்விகளுக்கு தமிழக போக்குவரத்து துறை செயலாளர், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள் பதில்தர வேண்டும். வழக்கு வரும் செப்டம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.