காசோலை மோசடி வழக்கு: மாஜி எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி- ஐகோர்ட்
சென்னை: காசோலை மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அத்துடன் தண்டனை உறுதி செய்யப்பட்ட அன்பரசு, மணி இருவரையும் சிறையில் அடைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளைக்காக 2002-ல் பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் ரூ35 லட்சம் கடன் வாங்கியிருந்தார் அன்பரசு. இந்த விவகாரத்தில் அன்பரசு கொடுத்த காசோலைகள் பணம் இல்லாததால் திரும்பிவிட்டன.
இது தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முகுந்த்சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2015-ம் ஆண்டு அன்பரசு, அவரது மனைவி கமலா, அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இத்தண்டனையை எதிர்த்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் முதலில் அன்பரசு மேல்முறையீடு செய்தார். ஆனால் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அன்பரசு உள்ளிட்டோருக்கான சிறை தண்டனையை உறுதி செய்தது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பரசு மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அன்பரசுவின் மனைவி காலமாகிவிட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கைவிடப்படுகிறது; அன்பரசு, மணி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது. ஆகையால் 2 பேரையும் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.