போலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்
சென்னை: போலி பத்திரம் தயாரித்து நில மோசடி செய்த நபரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பள்ளிக்கரணையில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமாக 21 சென்ட் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து, தங்களுக்கு சொந்தமானது என சரவணன் உள்ளிட்ட 8 பேர் உரிமை கோரினார்கள்.
இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடிப் பிரிவில் சரவணன், நாசர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என நில உரிமையாளர் ஜெய்சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சரவணனின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளதால், ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, சரவணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.