27 ஏரி, குளங்களை காணவில்லை.. கண்டுபிடிக்கக் கோரி வழக்கு.. கலெக்டருக்கு நோட்டீஸ்!
சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர் நிலைகளை கண்டுபிடிக்க கோரி வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், நீர்நிலைகளை அதன் பழைய நிலைக்கே மீட்டெடுக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நீர்நிலைகளை கண்டறிந்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
விசாரணை வளையத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன்..? டெல்லி வரை எதிரொலித்த பேச்சு..!
நீர்நிலைகள் காணாமல் போனதற்கு அரசு அதிகாரிகளின் செயலற்ற தன்மையே காரணம் என மனுவில் குற்றச்சாட்டு, சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மிகப்பெரிய கட்டிடங்கள் எழுப்பபடுவதால் மழைநீரை சேகரிக்க முடியாமல் கடலில் போய் கலக்கின்றது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவருடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.