அம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: கட்டிட தொழிலாளர்கள் நல வாரிய நிதியை, அம்மா உணவகத்திற்கு பயன்படுத்துவதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டிட தொழிலாளர் நலனுக்காக கடந்த 1994 ம் ஆண்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது. கட்டிடங்கள் கட்ட ஆகும் செலவில் ஒரு சதவீத தொகை வரியாக வசூலிக்கப்பட்டு, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த அடிப்படையில் வாரியத்தில் கணக்கில் 3 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இந்நிதி மூலம் கட்டிட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், பிரசவ கால மருத்துவ நிதி ஆகிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்குமிடங்கள் கட்டுவதற்காக 31.65 கோடி ரூபாயை அரசு பயன்படுத்தியுள்ளதாகவும், மேலும் வாரியத்தின் நிதியை அம்மா வாரியத்திற்கு பயன்படுத்தபடுவதாகவும் குற்றம் சாட்டி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவர் பொன்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தன் மனுவில், நலவாரியத்தின் கீழ் சொற்ப தொகையே உதவியாக வழங்கப்படுவதாகவும், காஞ்சிபுரம் கட்டப்பட்டுள்ள காப்பகத்தினால் கட்டிட தொழிலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை என தெரிவித்திருந்தார்.
பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்களுக்கு, அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் இரண்டு அரசாணைகளை பிறப்பித்தது.
அந்த அரசாணையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுக்கு, நல வாரியத்தின் நிதியிலிருந்து அம்மா உணவகத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அரசாணைகளுக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன், மனுவுக்கு தமிழக அரசும், தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.