அத்திவரதர் குள பராமரிப்பு.. அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு
சென்னை: அத்திவரதர் குளம் தூர்வார கோரும் வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனந்தசரஸ் குளத்தை மிகவும் மோசமான முறையில் பராமரிக்கின்றீர்கள் என்றும், தண்ணீரின் தரம் குறித்து திங்கட்கிழமை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
குளம் சுத்தம் செய்யும் பணியில் சி.ஐ.எஸ்.எப் வீரர்களை ஏன் உபயோகப்படுத்த கூடாது என கேள்வி எழுப்பி போர்கால அடிப்படையில் 50 முதல் 75 சி.ஐ.எஸ்.எப் வீரர்களை அனுப்பி பணிகளை முடிக்கலாம் என அறிவுறுத்தினார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், குளத்தை நிரப்ப தேவையான 25 ஆயிரம் லிட்டர் தண்ணீரை நிரப்ப வேண்டும். பொற்றாமரை குளத்தில் உள்ள நீர் குடிக்க தகுதியானதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால், பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீரையும் விடலாம். ஆழ்துளை கிணறு மூலமாகவும் நீர் நிரப்பலாம் தெரிவிக்கப்பட்டது.
சிஐஎஸ்எஃப்-க்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அறநிலையத்துறை இத்தனை நாட்களாக பணியை உள்ளூர் வாசிகளும், அறநிலையத்துறையும் செய்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் எப்படி சிஐஎஸ்எப்பை அனுமதிக்க முடியுமென தெரிவித்தார். இன்று காலையில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருவதாகவும், முழுமையாக விரைவில் பணி முடிவடையும் தெரிவித்தார். அவற்றை கண்காணிக்க மூன்று அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதையேற்ற நீதிபதி சிஐஎஸ்எப் வேண்டாம் என தெரிவித்தார். பின்னர் அத்திவரதரை குளத்தில் இறக்கி அறையில் வைத்தவுடன், அந்த அறையில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்பலாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை ஆகஸ்ட் 19க்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து எந்த தண்ணீரை குளத்தில் நிரப்பலாம் என உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக அத்திவரதரை வைக்கும் அறையிலேயே நீர் ஊறி வருவதாக தெரிவித்ததையும் நீதிபதி குறித்து கொண்டார்.