பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள்.. தனி பிரிவு கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணிகளை கவனிக்க தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தனி பிரிவை அமைக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் தாக்கல் செய்துள்ள மனுவில், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்திய தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், 5 ஆண்டுகளுக்கு பராமரித்தது... பின், நகராட்சி வசம் ஒப்படைத்து விட்டதால், அதன் பிறகு முறையான பராமரிப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
கழிவு நீர் வடிகால்களை பராமரிக்க நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லை எனவும், குழாய்கள் உடைந்து கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை நகராட்சி பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
பகவத் கீதையும்... திருக்குறளும் வேறுவேறு இல்லையாம்... டிடிவி தினகரன் பேட்டி
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள் மற்றும் பிற உள்ளாட்சிகளில் உள்ள பாதாள சாக்கடை திட்டங்களை பராமரிக்க தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தனிப்பிரிவை அமைக்க உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு, நவம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக நகராட்சி நிர்வாக துறை செயலாளர் மற்றும் ஆணையர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குனர், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டது.