சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு பிரிவை கலைக்க தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு
Recommended Video
சென்னை : சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய விதிக்கப்பட்ட உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷெனாய் நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் மருத்துவமனை சார்பில் ஜெனரேட்டர் வைக்கபட்டுள்ளதாகவும் அந்த ஜெனரேட்டரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள ஜெனரேட்டர் அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சட்ட விரோத கட்டுமானங்களை தடுக்க மாநகராட்சி எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் ஊழல் நடவடிக்கைகள் மலிந்து விட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் நான்கு வாரங்களில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மாநகராட்சி சார்பில் மேல்முறையீட்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு பிரிவை கலைக்க தனி நீதிபதி விதித்த உத்தரவிற்கு தடை விதித்தனர்.