10வது வேலைக்கு பிஇ வேண்டாம்... போலீஸ் வேலைக்கு அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க உத்தரவு
சென்னை: போலீஸ், சிறைவார்டன், தீயணைப்புத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளருக்கு அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சிறப்பு காவல்படையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் முத்து. இவர் எந்த காரணமும் தெரிவிக்காமல் 21 நாட்கள் தொடர் விடுமுறை எடுத்துள்ளார்.
இதையடுத்து அவரை பதவியில் இருந்து விலகியதாக அறிவித்து ஆயுதப்படை டி.ஐ.ஜி. முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிறப்பு காவல்படை கமாண்டட் உத்தவு பிறப்பித்தார்.
தடதடக்கும் தேனி.. கடும் போட்டியில் 3 வேட்பாளர்கள்.. வெல்ல போவது யாரு?
உயர்நீதிமன்றத்தில் மனு
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்து மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், குறிப்பிட்ட நாட்களுக்குள் டி.ஐ.ஜி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்காத மனுதாரர் முத்து, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்து வழக்கு போட்டு அதற்கு கையெழுத்திட்டுள்ளார். இது ஒழுங்கீனமாக தெரிகிறது எனவே அவரது மனுவினை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்மார்ட்போன்கள்
மனுவை தள்ளுபடி செய்த பின் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வெளியிட்ட உத்தரவில், "சமீபகாலங்களில் காவல்துறையில் ஓழுங்கீனம் அதிகரித்து வருகிறது. போலீசார் பணிநேரத்தின் போது ஸ்மார்ட்போன்களில் சினிமா பார்ப்பது, அதிலேயே எந்த நேரமும் மூழ்கி கிடப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
அதிகம் படித்தவர்கள்
பணிக்குத் தேவையான கல்வித்தகுதிக்கு அதிகமாக படித்தவர்களை நியமிப்பதால் இந்த ஒழுங்குனமான செயல்கள் அதிகரிக்கிறது. உயர்நீதிமன்றத்தில் துப்பரவு பணி, அலுவலக உதவியாளர் பணி போன்றவற்றுக்கு முதுகலை படித்தவர்கள் நியமிக்கப்பபட்டிருப்பதால் அவர்கள் பணியினை அக்கறையுடன் செய்வதில்லை.
கல்வித்தகுதி
போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு துறை போன்ற சீருடைப் பணியாளர்களுக்கு அதிக பட்ச கல்வித் தகுதி என்ன என்பதை நிர்ணயித்து தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் 8 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதன் மூலம் 10 ம் வகுப்பு தகுதி வேலைக்கு முதுகலை படித்தவர்களை அனுமதிப்பது தவிர்க்கப்படும்" இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.