சின்னத்தம்பி நடமாட்டம் எப்படி இருக்கு.. அரசிடம் அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்
சின்னதம்பியின் நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தர அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 12-க்குள் இந்த அறிக்கையினை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னதம்பியை பிடிக்க முடியாமல் 6-நாட்களாக வனத்துறை திணறி வருகிறது. இப்போதைக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில்தான் சின்னதம்பி கடந்த 6 நாட்களாக முகாமிட்டுள்ளான்.
ஆலையின் அருகில் இருந்த கழிவுநீர் குட்டையில் பகலெல்லாம் நன்றாக, சாப்பிட்டு, தூங்கிவிட்டு, இரவு முதல் காலை வரை கும்கிகளுடன் விளையாடியே இந்த 6 நாட்களும் கழிந்தது.
தங்க இடம் இல்லை
ஆனால் தற்போது குட்டையை மூடிவிட்டதால், எங்கே போவது என்று தெரியாமல், அருகில் இருந்த கரும்பு தோட்டம், வயல்வெளிகளில் நுழைந்து, அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. நிம்மதியாகவும், நிரந்தரமாகவும் தங்குவதற்கு இப்போதைக்கு சின்னதம்பிக்கு இடம் இல்லை.
செங்கல் சூளைகள்
இந்நிலையில், சின்னத்தம்பியை யானைகள் முகாமில் சேர்க்கக் கோரி விலங்குநல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை ஹைகோர்டில் மனு தாக்கல் செய்தார். கோவை தடாகம் பகுதி செங்கற்சூளையில் இருந்து வரும் நச்சு புகையே யானைகள் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வர காரணம் என்பதால், அந்த செங்கல் சூளைகளை மூட வேண்டும் என்றும் முரளிதரன் தனது மனுவில் கோரிக்கையாக தெரிவித்திருந்தார்.
சின்னதம்பி நடமாட்டம்
இதன் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சின்னதம்பி நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வரும் பிப்ரவரி 12-க்குள் இந்த அறிக்கையினை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
நிலுவையில் உள்ளது
ஏற்கனவே சின்னதம்பிக்கு மயக்கஊசி செலுத்தி பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இது சம்பந்தமாக எந்த உத்தரவும் கோர்ட் பிறப்பிக்கவில்லை.
மயக்க ஊசி
ஆனால் வனத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "பிப்ரவரி 11-ம் தேதிக்குள் சின்னதம்பிக்கு மயக்க ஊசி போட்டு பிடிக்க உள்ளோம், வனத்துறையினரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார். எனவே சின்னதம்பி விவகாரத்தில் தமிழக அரசு, மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் என்னவாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.