நர்ஸ்கள் பணி நிரந்தரம்.. உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
சென்னை: செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதார துறை செயலாளர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 243 செவிலியர் 7 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரப்படுத்த கோரி தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் கடந்த 2017 ம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
இந்நிலையில் மருத்துவ பணிகள் பாதிக்கப்படுவதால் செவிலியர் போரட்டத்திற்கு தடை விதிக்க கோரி கணேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் செவிலியர்களுடன் 6 மாதங்களில் பேச்சுவார்த்தை நடத்த முடிக்க, சுகாதார துறை செயலாளர் குழு அமைத்து கடந்த 2017 ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படைய சுகாதார துறை செயலாளர் தலைமையிலான குழுவிடம், செவிலியர்கள் தனிதனியாக கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்தாக கூறி செவிலியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது ஆஜரான வழக்கறிஞர் புகழ்காந்தி, நீதிமன்றம் செவிலியர்கள் மனு தொடர்பாக சுகாதாரத்துறை பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் இதுவரை பரிசீலனை செய்யாமல் சுகாதாரத்துறை காலதாமதம் செய்து வருவதாகவும் நீதிமன்றத்தில் வாதத்தை எடுத்து வைத்தார்
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே சசிதரன், பி.டீ ஆஷா அமர்வு, சுகாதார துறை செயலாளர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.