தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்
சென்னை: வேலூரில் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை கொண்டு செல்ல பிற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தொட்டில் கட்டி பாலத்தில் இருந்து இறக்கி எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த குப்பன், ஆகஸ்ட் 19ல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மறுநாள் (ஆகஸ்ட் 20) குப்பனின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் உடலை எடுத்து செல்ல அப்பகுதி பிற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பகுதியிலிருந்த ஒரு மேம்பாலத்தின் வழியாக உடலை தொட்டில் கட்டி கீழே இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.