அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
Recommended Video
சென்னை: அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எடுத்து, 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டும் என எந்த ஆகம விதிகளும் இல்லாத நிலையில், அத்திவரதர் தரிசன உற்சவத்தை நீட்டிக்க கோரியும், தரிசன கால அளவை நீட்டிக்காமல் இருப்பது பக்தர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணை வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில்,
1703 ம் ஆண்டு கோவில் நிர்வாகிகள், குளத்தை சுத்தப்படுத்திய போது, அத்திவரதர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதன்பின், 1937 ம் ஆண்டு சிலை எடுக்கப்பட்டு, 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டது. 42 ஆண்டுகளுக்கு பின், 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்ட போது, 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தரிசன நாட்கள் 40ல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்பட்டது
தற்போது, ஒரு நாளைக்கு 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். எந்த ஒரு ஆகம விதியும் இல்லாத நிலையில், தரிசன நாட்களை நீட்டிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.
அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு- இனி 2059ல்தான் குளத்தை விட்டு வெளியே வருவார்
அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அரசு தரப்பில் பதில் மனுக்களை தாக்கல் செய்தார். அதில் கோவில் ஆகம விதி, நடைமுறைப்படி 48 நாட்களுக்கு பின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க அரசை மனுதாரர்கள் நிர்பந்திக்க முடியாது என அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டது.
இதை ஏற்றக் கொண்ட நீதிபதிகள்,கோவில் மரபு, வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட முடியாது எனவும் கோவில் நிர்வாகமும், அரசும் தான் அத்திவரதர் தரிசன கால அளவு நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என கூறி வழக்கு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.