ரூ. 1000 கோடி நிலம் ஆக்கிரமிப்பு.. கையகப்படுத்திய மாநகராட்சி.. தடை விதிக்க மறுத்த ஹைகோர்ட்
Recommended Video
சென்னை: சென்னை அடையாறு பகுதியில் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலத்தை தனியார் கல்வி நிறுவனத்திடமிருந்து மாநகராட்சி கையகப்படுத்தும் நடவடிக்கையில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.
சென்னை அடையாறு கெனால் பேங்க் சாலையில், செயின்ட் பேட்ரிக் கல்வி நிறுவனம் உள்ளது. இங்கு, மேல்நிலைப் பள்ளி, கலைக்கல்லுாரி ஆகியவை உள்ளன. இதை ஒட்டி, மாநகராட்சிக்கு சொந்தமான, 19.66 ஏக்கர் இடம் உள்ளது. இதில், 5.20 ஏக்கர் நிலத்தை, தனியார் கல்வி நிறுவனம், ஆக்கிரமித்திருந்தாக புகார் எழுந்தது. இதன் சந்தை மதிப்பு, 1,000 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த, 2012ல், கல்வி நிறுவனம் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டது. அந்த மனு,தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை, நில நிர்வாக ஆணையரும் தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து கல்வி நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது
வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கையும் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து சனிக்கிழமை 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் பேட்ரிக் கல்வி நிறுவனம் மனு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி அனுமதியளித்ததின் பேரில் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் இளந்திரையன் அமர்வு முன்பு அவசர வழக்காக நேற்று நள்ளிரவு 12 மணிவரை விசாரணை நடைபெற்றது.
குற்றாலத்தில் திமுதிமுவென கொட்டும் தண்ணீர்.. ஆர்ப்பரிக்கும் அருவிகள்.. மக்கள் கூட்டம் செம!
மனுதாரார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாநகராட்சி கையகப்படுத்தியது தவறு என்றும் வரும் வியாக்கிழமை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதாக கூறிவிட்டு உடனடியாக கையகப்படுத்தியது தவறு, எனவே மேற்கொண்டு கையகப்படுத்தக்கூடாது,தற்போது உள்ள நிலையே நீடிக்க உத்தரவிடவேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முறைப்படி நோட்டீஸ் வழங்கி பதிலை பரீசிலனை செய்து எந்த ஒரு தடை உத்தரவு இல்லாத காரணத்தாலும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதாலும் சனிக்கிழமை கையகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
நிலத்தின் ஆவணங்களை மோசடி செய்து தயாரித்து வைத்துள்ளனர் என்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்களை பயன்படுத்தியது கண்டனத்திற்கு உரியது என்றும் அதிகாரிகள் தனிப்பட்ட விருப்பத்திற்காக கையகப்படுத்தவில்லை என்றும் அந்த இடத்தை விளையாட்டு மைதானமாகவும், நடைபயற்சிக்காகவும் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்ககூடாது என கேட்டுக்கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாநகராட்சியின் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்த நீதிபதிகள் மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.