அண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள, அண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தை மீட்கும்படி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை காலி செய்யும்படியும், அங்கு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை அகற்றவும் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சி நடவடிக்கை எடுத்த நிலையில், அண்ணாநகர் டவர் கிளப் சார்பில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட நிலத்தை மாநகராட்சி தன் கட்டுப்பாட்டில் எடுத்து விட்டதால் அந்த நிலத்தில் கிளப் தனது நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 23 ம் தேதிக்கு தள்ளிவைத்தது.