திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்து ஹைகோர்ட் சொன்ன யோசனை
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டபேரவைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பொதுதேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கு.க.செல்வம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது.
அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஆர்.செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில், கு.க.செல்வம் தலைவராக உள்ள ஸ்ரீஜெயா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக மதுரவாயலில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான 10 ஏக்கர் நிலம் உள்ளதாகவும்,இந்த விவரத்தை கு.க.செல்வம் தனது வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி கு.க.செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'
அதில், இந்த சொத்து அறக்கட்டளையின் பெயரில் வாங்கபட்டுள்ளது எனவும் அந்த அறக்கட்டளை பொது மக்களுக்கான அறக்கட்டளை எனவும், அந்த அறக்கட்டளையின் பெயரிலேயே வருமானவரி செலுத்தப்படுவதாகவும் அவருடைய மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணக்குமார், தேர்தல் வழக்கில் எம்.எல்.ஏ. கு.க.செல்வத்துக்கு எதிராக கூறியிருந்த குற்றசாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அவர்கள் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் சொத்து விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.