இது திமுகவுக்கு வச்ச குறியா.. 4 எம்பிக்களின் நிலை என்னாகும்.. பரபரக்கும் சின்ன பிரச்சினை!
திமுக கூட்டணி கட்சி வெற்றி செல்லுமா என்று தெரியவில்லை
சென்னை: பாரிவேந்தர், ரவிக்குமார், கணேசமூர்த்தி, சின்ராஜ்.. இவர்களின் நிலைமை இனி என்னாகும் என்று தெரியவில்லை. இவர்களின் எம்பி பதவி தப்புமா, தப்பாதா என்ற பெரிய கேள்வியும் சந்தேகமும் ஹைகோர்ட் உத்தரவு மூலம் எழுந்துள்ளது!
எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விசிக ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ், மதிமுகவின் கணேசமூர்த்தி, ஐஜேகே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதாவது, தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.
தடதடக்கும் ஹைதராபாத்.. தெலுங்கானாவின் கிரண்பேடி ஆவாரா தமிழிசை.. டென்ஷனில் கேசிஆர்!
மோசடி ஆகாதா?
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா? என கேள்வி எழுப்பியதுடன், சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். ஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது" என்று கூறி, இதற்கெல்லாம் வெற்றி பெற்ற எம்பிக்கள் அடுத்த மாதம் 12-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பேச்சுவார்த்தை
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெற்றி பெற்றவர்களுக்கு அதாவது திமுக கூட்டணிக்கு கிலியைதான் தந்துள்ளது. எம்பி தேர்தல் பேச்சுவார்த்தையின்போது, தாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோமா, இல்லையா என்று தெரியாமலேயே சில நாட்கள் தவித்தது மதிமுகவும், விசிகவும்தான்.
சின்னம் பஞ்சாயத்து
அதனால்தான் காங்கிரசுக்கு 10 சீட் தந்தும் இவர்களுடன் கூட்டணி விவகாரத்தை பற்றி பேச்சு ஆரம்பிக்காமலேயே இருந்தது. பிறகு கூட்டணியில் இணைந்ததும், சீட் பஞ்சாயத்து ஆரம்பமானது.. மதிமுகவும் விசிகவும் மாறி மாறி கேட்ட சீட் கிடைக்காமல், ஒதுக்கப்பட்ட சீட்டை வாங்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு பிறகு சின்னம் பஞ்சாயத்து ஆரம்பமானது. அப்போதுதான், உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் பாரிவேந்தர், எடுத்தவுடனேயே உதயசூரியன் சின்னத்தில் போட்டி என்பதில் உறுதியாகிவிட்டார்.
விதிமீறலா?
இதுநாள் வரை சொந்தமாக கட்சி, சின்னம், கொள்கை வைத்திருப்பினும், அதை விட்டுக் கொடுத்துவிட்டு, இன்னொரு கட்சியின் உறுப்பினர் ஆகி போட்டியிடும் நிலைமை ஏற்படவே செய்தது. ஆனால், ஒரு கட்சியின் அடிப்படை உறுப்பினர் அல்லாதவர், தான் சார்ந்த கட்சி மாறாமல், மாற்று கட்சி சின்னத்தில் போட்டியிடும் விண்ணப்பத்தை ஏன் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. விதிமீறல் என்பது தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்குமா என்றும் தெரியவில்லை.
விசாரணை தீர்ப்பு
இப்போது விதிமீறல் என்றால், இவர்களின் வெற்றி பறிக்கப்பட்டுவிடுமா? என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை இந்த வெற்றியை முடக்கும்பட்சத்தில், 5 ஆண்டு பதவி பறிபோவது ஒரு பக்கம் இருந்தாலும், இதன் வழக்கு விசாரணை, தீர்ப்பு எவ்வளவு காலம் இழுத்தடிக்கப்படுமோ என்றும் கலக்கம் வருகிறது.
திமுகவுக்கு குறி?
அதேசமயம், இந்த 4 பேரின் வெற்றி முடக்கப்பட்டால், அந்த தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க நேரிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் இந்த வழக்கில் சிக்கியுள்ள நால்வருமே திமுக கூட்டணிக் கட்சியினர் என்பதால் இது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.