கோவை- குழந்தைகள் கொலை வழக்கில் மனோகரனின் தூக்கு தண்டனையை டிச.2-ல் நிறைவேற்ற இடைக்கால தடை
Recommended Video
சென்னை: கோவையில் குழந்தைகளை கடத்தி படுகொலை செய்த மனோகரனின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவையில் 2010-ம் ஆண்டு 10 வயது சிறுமி, 7 வயது சிறுவன் ஆகியோர் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக ஓட்டுநர் மோகன்ராஜ், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது இந்த வழக்கு.
இவ்வழக்கு விசாரணையின் போது மொகன்ராஜ், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். மனோகரன் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதில்ல் 2012-ல் கோவை நீதிமன்றம் மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தார். ஆனால் மனோகரனின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனோகரன் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மனோகரனை டிசம்பர் 2-ந் தேதி தூக்கிலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே கருணை மனு கோரி ஆளுநருக்கு மனு அளிக்க அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனோகரனின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.