1 கி. மீ. இடைவெளிக்குள் 2 கல் அரைக்கும் யூனிட்டுகள்.. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு தடை
சென்னை: ஒரு கிலோ மீட்டர் தொலைவு இடைவெளிக்குள் இரண்டு கல் அரைக்கும் யூனிட்டுகள் அமைத்து கொள்ள அனுமதி வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாறைகளை ஜல்லிகளாக உடைக்க அமைக்கப்பட்டுள்ள கல் அரைக்கும் யூனிட்டுகளால் ஏற்படும் காற்று மாசுவால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படுவதை தடுக்க கடந்த 2004- ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனைகள் கொண்டு வந்தது.
அதன்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், புனித ஸ்தலங்கள், குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் 'கல் அரைக்கும் யூனிட்டுகள்' அமைக்க கூடாது எனவும், இரண்டு யூனிட்டுகளுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் தொலைவு இடைவெளி இருக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இந்த கட்டுப்பாடுகளை நீக்கி மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். மேலூம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையானஆய்வு மேற்கொள்ளாமல் அமைச்சர் பரிந்துரையின் பேரிலேயே மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த கட்டுப்பாடுகளை நீக்கி உத்தரவு பிறப்பித்ததாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் கொண்ட அமர்வு , இதுதொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டனர். அதுவரை, ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இரண்டு கல் அரைக்கும் யூனிட்டுகள் அமைத்து கொள்ள அனுமதி வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.